மு.சு.கண்மனி
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்கிற பெரியாரின் அழுத்தமான வரிகள் இழிவையும், சாதி ஆதிக்கத்தையும் தகர்ப்பதற்கு மட்டும் அல்ல, பாலின பேதம் அகற்றுவதற்கும் தான். இது பல நேரங்களில் நாம் மறந்துவிடும் எதார்த்த உண்மையாகவே உள்ளது.ஆணாதிக்க மனநிலையை குடும்பமும் சமூகமும் உள்வாங்கி தக்க வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் மொழிக் கட்டமைப்பும். எம்மொழியாக இருந்தால் என்ன அதன் சொல்லாக்கம் ஆணாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டே நடக்கிறது.
எடுத்துக்காட்டாக, திருநங்கை திருநம்பிகளை மூன்றாம் பாலினம் என்கிறோம். அப்படி என்றால் முதல் பாலினம் யார்? இரண்டாம் பாலினம் யார்? ‘மனிதர்’ என்பது பொதுச் சொல். இதில் ஆண்பாலை ‘மனிதன்’ என்கிறோம். இதற்கு இணையாகப் பெண்பாலை அழைக்கும் சொல் உண்டா? இந்தக் கேள்வியை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். இப்படி மொழியில் உள்ள ஆணாதிக்கச் சொற்களை வரிசைப்படுத்தினால் ஒரு முனைவர் பட்டமே பெற்று விடலாம். ஆய்வு ஒரு பக்கம் இருக்கட்டும்; நாமும் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் நாள்தோறும் இயல்பாய் இதனைக் கடந்து கொண்டுதானே இருக்கிறோம். அதன் நீட்சியாகத்தான் ‘திருமதி பழனிச்சாமி’ இன்று நடைமுறையில் உள்ளது.

புரியவில்லையா? திருமணமான பெண்ணை அழைக்க அவள் பெயர் வேண்டாம் அவளது கணவரின் பெயருக்கு முன்னால் திருமதி என்று போட்டாலே போதும் என்கிற நிலைதான். அதெல்லாம் சரி அந்தப் பழனிச்சாமி யார் என்று கேட்கிறீர்களா? நடைமுறை எடுத்துக் காட்டிற்கு ஒரு பெயர் அவ்வளவுதான்.
பெண் என்பவள் ஆணைச் சார்ந்தவள். அவளுக்கு தனித்துச் செயல்படத் தெரியாது அல்லது செயல்பட முடியாது. அதனைவிட ஒரு படி மேலே சென்று தனித்துச் செயல் படக்கூடாது என்கிற அடக்குமுறைச் சொல் அல்லவா இந்த ‘திருமதி’. இதைத்தானே மனுஸ்மிருதியும் சொல்கிறது. திருமணமான பெண் கணவனைச் சார்ந்தவள் கணவனின் உடைமை என்பது தானே இதன் பொருள்.
1929 இல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தைப் போட்டதோடு, தன் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டத்தை நீக்கி அறிவித்தார் தந்தை பெரியார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த வரலாற்று உண்மை. ஆனால், பெண்கள் தங்கள் பெயரின் பின்னால் கணவன் பெயரை இணைத்துச் சொல்வதும், முன்னெழுத்தாக (initial) வைத்துக் கொள்வதும் இயல்பான ஒன்றாகிவிட்டது.
சென்னையில் 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது அரசின் அஞ்சல்களில் அனைவருக்கும் ‘ஸ்ரீ என்னும் அடைமொழிச் சொல்லைப் பயன்படுத்தக் கூறி ஆணையிட்டது. இதனை எதிர்த்து 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் நாள் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற நீதிக் கட்சி 16ஆவது மாகாண மாநாடு ‘ஸ்ரீ’ என்னும் வார்த்தைக்குப் பதில் ‘திரு’ என்னும் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டிக் கொண்டது. இதன் நோக்கம் ஒருவரை அறிமுகம் செய்யும்பொழுது வயது பால் பேதமின்றி மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பதே.
ஆங்கிலத்தில் ‘Mr’ என்று ஆணை அழைப்பதை போல் பெண்ணை ‘Ms’ என்ற பொதுச் சொல்லால் அழைக்கலாம். ஆனால் ‘Miss’ என்றும் ‘Mrs’ என்றும் அழைப்பதே வழமையாகிவிட்டது.
தமிழில் தந்தை பெரியாரின் தீர்மானத்தைப் போல் ‘திரு’ என்ற சொல் பால்பொதுமையை உணர்த்தினாலும், நடைமுறையில் ஆணைக் குறிக்கவே பயன்படுகிறது அல்லது ‘திரு’ என்ற சொல் ஆணுக்குரியதாகவே கருதப்படுகிறது.
பொதுவான விண்ணப்பப் படிவங்களில் பெயரினை நிரப்பிய பின் அதன் கீழ் க/பெ (கணவன் பெயர்) / த/பெ (தந்தை பெயர்) என்று கேட்கப்பட்டிருக்கும். ம/பெ (மனைவி பெயர்) / தா/பெ (தாயின் பெயர்) என்ற ஒன்று ஏன் இல்லை என்கிற கேள்வி நமக்குத் தோன்றுவதே இல்லை. இதிலும் மணமான பெண்ணிற்கு கணவனே care of முகவரி என்பது மாற்றமுடியாததாய் திணிக்கப்படுவதோ கொடுமை.
நடைமுறை இப்படி இருக்க, சட்டம் என்ன சொல்கிறது என்றால், It is not mandatory for women in India to use their husband’s name or their father’s name before their own. There is no law in India that forces a women to adopt her husband’s surname after marriage.
அதாவது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு பெண் தனது பெயரின் பின்னால் கணவன் அல்லது தந்தையின் பெயரைப் பின் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதை யாரும் வற்புறுத்தக் கூடாது என்கிறது. அண்ணல் அம்பேத்கரின் சட்டம் ஒருபுறமும் தந்தை பெரியாரின் கைத்தடி மறுபுறமும் கோலோச்சி நின்றாலும், முடை நாற்றம் வீசும் ஆணாதிக்கம் கொல்லைப்புறமாய் வந்து நடுவீட்டில் அமர்ந்துகொள்வதைத் தடுக்கவே முடிவதில்லை.
இந்தச் சமுதாய நடைமுறையில் சிறிதளவேணும் மாற்றம் கொண்டுவர வேண்டும். என்றால் அதனை அரசாங்கம் கையில் எடுக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றும் வகையில் குறைந்த பட்சம் க/பெ (கணவன் பெயர்) என்கிற நிரப்புதல் காலம் கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும். அதைப் பாலின பேதமற்ற சம நிலைச் சமூகம் உருவாக்க நினைக்கும் நமது சமூக நீதி அரசு இதைச் சீர் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம்.
பார்கிங்க் யார்டிற்குள் அதி வேகமாக புகுந்த டிப்பர் லாரி! கேரவன் ஓட்டுநர் பலி!