சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5 மற்றும் 8ஆம் வகுப்பில் தேர்வு நடத்தி, குழந்தைகளை மீண்டும் அதே வகுப்பில் உட்கார செய்வது குழந்தைகள் மீதான வன்முறை என்று பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பை சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதன் தாக்கங்கள் குறித்து பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் குழந்தைகளுக்கான கல்வி, அடிப்படை உரிமை என்கிற சட்டத்தை இயற்றிய பிறகு, 8ஆம் வகுப்பு வரை ஒரு குழந்தை பெயில் ஆகிவிட்டது என்று சொல்லி நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அந்த குழந்தை அடுத்த அடுத்த வகுப்புகளுக்கு போகலாம் என்பதுதான். அந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெறாவிட்டால் உடனடியாக இன்னொரு தேர்வு நடத்தலாம். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்கலாம் என்று சொன்னார்கள். இதற்கு கடுமையான எதிர்ப்பு வந்தது. இது குழந்தைகளின் உளவியல் மீது நடத்தப்படுகிற தாக்குதலாகும். தமிழ்நாட்டை பொருத்தவரை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் தமிழ்நாட்டின் தொடர்ச்சியான நிலைப்பாடாக உள்ளது. ஆனால் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் இயங்கக்கூடிய பள்ளிகள், அது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆக கூட இருக்கலாம். இந்த பள்ளிகளில் மத்திய அரசின் சட்டத்தை மதிக்கிறோம் என்று அவர்களது வாரியத்தின் அனுமதியுடன் இந்த வேலையை செய்கிறார்கள்.
தனியார் பள்ளிகள், தங்களது பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால் படிக்க வைப்பதாக விளம்பரம் கொடுத்து நம்ப வைக்கிறார்கள். அப்படி கொடுக்கிற நம்பிக்கையால் தான் பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்கிறார்கள். அப்போது பெயில் மாணவர்களா? பள்ளிக்கூடமா? குழந்தை ஏன் கற்க முடியவில்லை என்று கண்டுபிடிக்க முடியாதது யாருடைய தோல்வி. அது பள்ளியின் தோல்வியாகும். குழந்தைக்கு வெற்றி – தோல்வி, தேர்ச்சி, தேர்ச்சியின்மை என்றால் என்ன என்று தெரியாது. அனைத்து குழந்தைகளும் படிக்கிறபோது ஒரு குழந்தை மட்டும் அதே வகுப்பில் இருந்தால், அந்த குழந்தைகளுக்கு ஒரு அதிர்ச்சி ஏற்படும். குழந்தைகளுக்கு செல்போனை அறிமுகம் செய்தது அரசுதான். எதற்காக டிஜிட்டல் கிளாஸ் கொண்டு வரப்பட்டது? அது எந்த வகையில் குழந்தைகளுக்கு உதவ போகிறது. பிசிக்கல் கிளாசுக்குதான் நான் பணம் கட்டுகிறேன். அப்போது பிசிக்கல் கிளாசில் அந்த குழந்தை என்ன படிக்கிறதோ அவ்வளவுதான்? அதன் பிறகு அந்த குழந்தை விளையாட வேண்டும். நூலகத்திற்கு செல்ல வேண்டும். புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டடும். செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். இதுதான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பயன்படக்கூடியதாகும். ஆனால் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் ஹோம் வொர்க் என்ன கொடுத்திருக்கிறார்கள் என்று நான் வாட்ஸ் அப்பில் பார்க்க வேண்டி உள்ளது. அப்போது மொபைல் பழக்கத்தை யார் ஏற்படுத்தியது. ஆனால் பழியை குழந்தை மீதே போடப் போகிறீர்கள். எனவே குழந்தை படிக்கவில்லை என்று சொல்வது அவர்கள் மீது சுமத்தப்படும் வீண் பழியாகும்.
நடுத்தர குடும்பங்கள் தான் தற்போது ஏமாற தொடங்கியுள்ளனர். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் ஒரு வணிக நிறுவனங்கள் தான். ஒரு பள்ளிக்கூடம் என்றால், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முதல்வரை, ஆசிரியர்களை சென்று சந்திக்க முடியுமா? விண்ணப்பித்தவர்கள் எல்லோரையும் சேர்த்துக்கொண்டீர்களா? 30 இடங்கள் உள்ளது என்றால் 300 விண்ணப்பங்களை விற்பனை செய்வதில்லையா? விண்ணப்பக்கட்டணம், பதிவு கட்டணம் என்று எதற்கு வசூலிக்கிறீர்கள். யாரிடம் அதிகமாக பணத்தை சுரண்ட முடியும் என்பதுதான் தனியார் பள்ளிகளில் அளவு கோலாகும். சாதாரண மனிதர்களுக்கு குழந்தைகள் மீது இருக்கக்கூடிய அன்பை, காசாக்கக்கூடிய இடத்திற்கு பள்ளிக்கூடம் என்று பெயர். தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேஷனாக இருந்தது. அவை தற்போது சிபிஎஸ்இ ஆகவும், ஐசிஎஸ்இ ஆகவும் மாறின. எதற்காக என்றால் மாநில அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. மாநில அரசு பாடத்திட்டம் என்பது எல்லோருக்கும் சீராக இருக்க வேண்டும் என்று சொல்லியது. அதை எப்படி என கேள்வி எழுப்பத் தொடங்கிய தனியார் பள்ளிகள், கற்றல் முறையில் நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று சொன்னால்தான் சந்தையில் தாக்குப்பிடிக்க முடியும் என்ற வகையில் பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருந்தவர்கள் 2009-2010க்கு பிறகு சிபிஎஸ்இ ஆக மாறியவர்கள் அதிகம். சிபிஎஸ்இ பள்ளிகள் நீட் பயிற்சி மையங்களுடன் தொடர்பில் உள்ளனர். அப்போது முழுக்க முழுக்க சந்தை முறையில் நம்மிடம் உள்ள பணத்தை எடுப்பதற்காக தான் இதை பயன்படுத்துகிறார்கள்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு உண்மையிலேயே கண்ணியம் மிக்க குழந்தை பருவத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அதை அரசுப் பள்ளியில் தான் சேர்க்க முடியும். அரசுப்பள்ளியில் சேர்ப்பது இயலாமையின் காரணமாகவோ, ஏழ்மையின் காரணமாகவோ அல்ல. பெற்றோர்களை பொருத்தவரை எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை பணம் கட்டி உள்ளார்களே அது எதற்காக? நான் 5 வருடம் பணம் கட்டி ஏன் என் குழந்தைக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் கூட கிடைக்கவில்லை என்று பெற்றோர்கள் கேட்க வேண்டும் அல்லவா? அதற்கு பதிலாக அந்த பெற்றோரிடம் தான் பணம் உள்ளதே, அவர்கள் இன்னொரு வருடம் படித்தால் என்ன? என்று கேட்பது சரியானதா? இது பணம் சம்பந்தப்பட்டது அல்ல. குழந்தைகளின் உளவியல் சம்பந்தப்பட்டதாகும். இன்னொரு வருடம் நீங்கள் பணம்தான் செலவு செய்ய முடியும். ஆனால் அந்த குழந்தையின் நண்பர்கள் எல்லாம் வேறு வகுப்பிற்கு செல்லும்போது இந்த குழந்தைக்கு ஏற்படுகிற உளவியல் தாக்கத்தை ஈடுகட்ட முடியுமா?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பெற்றோரிடம் கையெழுத்து கேட்டால் எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று சொல்லியுள்ளார். பள்ளிக்கூடத்தை தேர்வு செய்து, கட்டணம் செலுத்தியது பெற்றோர். இந்த இடத்தில் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பெற்றோர் எந்த பள்ளி தேர்ச்சி இல்லை என்று சொல்கிறார்களோ, அந்த பள்ளியை பார்த்து பெற்றோர் கேள்வி எழுப்ப வேண்டும். அந்த பள்ளியின் அணுகுமுறை நியாயமாக இல்லை என்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க முயற்சிக்க வேண்டும். எனவே முடிவு செய்கிற இடத்தில் அந்தந்த பெற்றோர்கள் தான் இருக்கிறார்கள். என் குழந்தையின் மனநிலையை விட கவுரவம் தான் பெரியது என்று எண்ணினால், அந்த பெற்றோர் நுகர்வோர் ஆக இருக்கிறார்கள். எனவே குழந்தையை மையப்படுத்தி முடிவுகளை எடுங்கள். வேறு எந்த காரணத்திற்காகவும் முடிவுகளை எடுக்காதீர்கள்.