சீமான் தமிழ் தேசிய கொள்கையில் இருந்து விலகி, பாஜகவின் பிடிக்குள் சென்றுவிட்டதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- நான் 27 ஆண்டுகாலம் சீமானுடன் பயணம் செய்துள்ளேன். சேரன் இயக்கிய தேசிய கீதம் படத்தில் சீமான் வேலை செய்தபோது, கவிஞர் அறிவுமதி மூலம் அவருடன் அறிமுகமானேன். பின்னர் சீமான் இயக்கிய தம்பி, வாழ்த்துக்கள் படத்தில் பணியாற்றியுள்ளேன். ஈழத்தில் சேரலாதன் என்பவர் புலிகள் அமைப்பின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் தலைவராக இருந்தார். அவருக்கு எங்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இலங்கையை சேர்ந்த சிங்கள இயக்குநர் ஒருவர் பிரபாகரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். அந்த படம் ஜெமினி லேபில் தயாராகிறது. அந்த படத்தை பார்த்து, புலிகள் அமைப்பு குறித்து தவறாக இருந்தால் அதை நிறுத்த செய்ய வேண்டும் என சொல்கிறார். அந்த படத்தில் பணிபுரியும் சவுண்ட் இஞ்சினியர் எனது நண்பர். நானும், வாழ்த்துக்கள் படத்தின் இணை கேமராமேன் சஞ்சய் ஆகியோர் சென்று பார்க்கிறோம். படம் முழுக்க முழுக்க தமிழ் இனத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியே வந்தால், பிரச்சினையாகும் என எரிக்க முடிவெடுக்கிறோம். அப்போது அங்கு வந்த தமிழ்தேசிய அமைப்பினர் அந்த இயக்குநரை தாக்கிவிட்டனர். பின்னர் இலங்கை துதரகம், உளவுத்துறையினர், மணிவண்ணன், சத்யராஜ், ராமநாராயணன் போன்ற பலரும் வந்து அந்த படத்தை பார்த்தனர். அப்போது, அது தவறான படம் என தெரிந்ததால், அதனை வெளியே விடக்கூடாது என்று முடிவு செய்தோம். அதன் காரணமாக சேரலாதனுக்கு என் மீது மதிப்பு ஏற்பட்டது.
பின்னர் சீமானை, பிரபாகரனை சந்திக்க அனுப்ப வேண்டிய ஒரு சூழல் வருகிறது. சீமான் வீட்டில் அவர் இலங்கை செல்லக்கூடாது என்று கடும் எதிர்ப்பு வருகிறது. நாங்கள் அவர்களிடம் பேசிய பின்னர் இலங்கைக்கு அனுப்பிவைத்தோம். அவர் 14 நாட்கள் இலங்கையில் இருந்தார். இலங்கை சென்றுவிட்டு வந்த பின்னர் இலங்கை பிரச்சினை, தமிழ் தேசியம் பற்றித்தான் பேசுவார். பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சி மைப்பும் இணைந்து செப்டம்பரில் ராமேஸ்வரத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதில் சீமான், அமீர், சேரன் போன்றோர் பங்கேற்று நேரலையில் பேசினார்கள். அன்றைக்கு அரசு ஏ1 ஆக அமீர், ஏ2 ஆக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அன்று இரவே சீமானை கைது செய்கிறார்கள். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல முறை அவர் கைது செய்யப்பட்டார். அப்போதெல்லாம் பெரியாரிய வாதியாகதான் சீமான் இருந்தார். 2013ல் எம்ஜிஆர் நகரில் கூட்டத்தில் பேசியபோது கூட சீமான் பெரியாரை புகழ்ந்துதான் பேசினார். ஒரு கட்டத்திற்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர்கள் நாம் தமிழர் கட்சிக்குள் வருகிறார்கள். பெரியார் நினைவு தினத்திற்கு அடித்துவைத்த போஸ்டர்களை ஒட்டக்கூடாது என்று அவர்கள் சொல்கிறார்கள். கடும் எதிர்ப்புக்கு பின்னர் நாங்கள் அந்த போஸ்டர்களை ஒட்டினோம்.
அப்படி படிப்படியாக சீமானின் முகம் மாறுகிறது. இது தொடர்பாக இயக்குநர் அமீர் போன்றோர் என்னிடம் கேட்டார்கள். நான் அவர் அப்படி செல்ல மாட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் தமிழர் கட்சின் பொதுச்செயலாளர் ஆகும் தகுதி உண்மையில் சாகுல் ஹமீதுக்கு மட்டும்தான் இருந்தது. 2009க்கு பிறகுதான் தமிழ் தேசியத்திற்கு, தமிழ்நாட்டிற்கு முழு முற்றாக இறையாண்மை கொண்ட தமிழ்நாடு அடைய வேண்டடும் என்ற கருத்தியல் கொண்டவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு கட்சி வேண்டும் என நாம் தமிழர் கட்சியை தொடங்கினர். நாம் தமிழர் சீமான் மட்டும் உருவாக்கிய கட்சி அல்ல. வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, காமராஜ், வெற்றிகுமரன், ஜெகத் கஸ்பர்,புதுக்கோட்டை முத்துக்குமார், நெல்லை சிவா போன்றோர் இணைந்து கட்சியை உருவாக்கினோம். இன்று நெல்லை சிவா மட்டும்தான் கட்சியில் உள்ளார். பின்னர் தீரன், அய்யநாதன் போன்றோரும் கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர்.
வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம் போன்றோர் ஏன் நாம் தமிழர் கட்சியை விட்டு போனார்கள் என்று தெரியுமா?. சீமானை விட அதிகமாக பேசி கைத்தட்டு வாங்கினால், அவருக்கு பயம் வந்துவிடுகிறது. சாட்டை துரைமுருகன், எதற்காக 2 முறை கட்சியை விட்டு போனார். உங்களிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு என்ற ஒன்று உள்ளதா?. அதற்கு முன்னர் ஒருவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றால் நான் கூப்பிட்டு அவர்களிடம் பேசுவேன். பின்னர் சீமான் அவர்களை போய் கட்சி வேலையை பார்க்குமாறு சொல்வார். இப்போது, நான் வெளியேறிவிட்டதால் கட்சியில் தற்போது அதற்கான ஆட்களே இல்லை. நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற பெற சீமான் தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பழைய ஆட்களை எல்லாம் வெளியேற்றுகிறார். கட்டமைப்புக்குழு என நாங்கள் 7 பேர் இருந்தோம். தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சி நிர்வாகிகளை நியமித்தோம். அதுவும் சீமான் ஆதரவாளர்களை தான் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இனத்தின் விடுதலைக்காக நாங்கள் அதனை பொறுத்துக்கொண்டோம்.
இப்போது கொள்கையை விட்டு விலகிச் செல்வதால் நாங்கள் சீமானை எதிர்க்கிறோம். தமிழ் தேசிய கொள்கையை பேசிய கொண்டிருந்த சீமான், இப்போது பாஜகவின் பிடிக்குள் சென்று விட்டதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இன்றைக்கு பிரபாகரனையும் பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்த வேண்டிய நிலைப்பாடு என்ன? இவர்கள் இருவரும் ஒன்றாக நிறுத்த வேண்டியவர்கள் ஆவர். பெரியாரிஸ்ட்டுகள் தான் நாதகவை உருவாக்க காரணமாக இருந்தனர். பிரபாகரனே ஒரு தேசிய இனம் தன்னுடைய விடுதலைக்கு போராடுகிறபோது, அருகில் உள்ள தேசிய இனத்தை பகைத்துக்கொண்டு வெல்ல முடியாது. அவர்களை எதிரியாக்கி வெறுப்பு அரசியலை பண்ணி, நாம் தனிமைப்படுத்தப்பட்டால் 8 சதவீத வாக்கை வைத்து என்ன செய்வது?
ஒரு கூட்டத்தில் சங்கி என்றால் செருப்பால் எடுத்து அடிப்பேன் என்று சீமான் சொன்னார். ஆனால் இன்று என்ன சொல்கிறார்? சங்கி என்றால் சக தோழன் என்கிறார். தோழன் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதவர் அல்ல சீமான். அப்படி என்றால் ஒற்றை கொள்கை, ஒற்றை கருத்தை கொண்டவர்கள் ஆவர். பாசிச மனநிலை கொண்டவர்களை, இந்தியாவை ஒரு கொடியின் கீழ் ஒரே கட்சியின் கீழ் கொண்டுவர துடிப்பவர்களை, நீங்கள் சக தோழன் என்றால் என்ன அர்த்தம்? 6 மாதங்களுக்கு முன்பு ஹெச்.ராஜாவை பைத்தியம் என்றார். அவர் உங்களை சைமன் சீமான் என்று சொல்கிறார். இன்று அவர் உங்களை திரு சீமான் என்கிறார். நீங்கள் ஹெச்.ராஜாவை பேரறிஞர் என்கிறீர்கள். பாண்டேவை பிராசாந்த் கிஷோருடன் பெரிய அறிவாளி என்கிறார்.
பெரியார் மீது எனக்கும் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. எப்போது அவரை ஏற்க வேண்டும். எப்போது ஏற்கக் கூடாது என்று எங்களுக்கு தெரியும். கடந்த டிசம்பர் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் பெரியாரை ஒழிக என்று சொல்ல நாங்கள் கட்சி தொடங்கவில்லை. பிரபாகரன் வாழ்க என்று சொல்லத்தான் கட்சி தொடங்கியுள்ளேளாம். அதற்கு அப்புறம் என்ன மாறுபாடு வந்தது. பெரியாரை ஏன் தகர்க்க வேண்டும். தமிழ் தேசியத்திற்கு ஆரியம் எதிரியா? திராவிடம் எதிரியா?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.