அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக திமுக மீது குற்றம்சாட்டுவதாக தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தோழர் மருதையன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- யார் அந்த சார்? இது கவிதைவரி மாதிரி ஒரு முழக்கம். கிடைக்காத ஒரு வரி கிடைத்திருக்கிறது. அந்த சார் என்ற நபர் ஏதே ஒரு வகையில் திமுகவை சார்ந்த செல்வாக்கு மிக்க நபர். இந்த ஞானசேகரன் மட்டும் குற்றவாளி அல்ல. இது ஒரு கும்பல். அந்த கும்பலை திமுக ஆதரிக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. இதற்கு காவல் ஆணையர் அளித்துள்ள பதிலில் அப்படி சார் யாரும் இல்லை, ஞானசேகரன் பிளைட்மோடில் செல்போனை வைத்துக் கொண்டு மிரட்டுவதற்காக பேசியதாக தெரிவித்துள்ளார். ஆனால் காவல் ஆணையர் பொய் சொல்கிறார் என்றும், அப்படி ஒரு சார் இருக்கிறார் என்பதும் தான் குற்றச்சாட்டாக உள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்று வழங்கியது. எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டது தவறு, அந்த பெண்ணுக்கு கண்ணியக் குறைவாக பதிவு செய்ய தவறி விட்டதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் ஆணையர் அருண் அந்த பெண் அளித்த புகாரை அப்படியே பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். ஒருவேளை அந்த சாரை காப்பாற்ற வேண்டும் என போலிசார் நினைத்திருந்தால் அந்த புகாரில் சார் என்ற வார்த்தையை அவர்களே விட்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் பதிவு செய்தனர். காவல் ஆணையர் முன்னதாகவே தெரிவித்ததால், இந்த வழக்கு எஸ்.ஐ.டி விசாரணக்கு மாற்றப்பட்டது.
மாணவி பாலியல் விவகாரம் வெளியாகி விவாதப் பொருளாகிறது. இதற்கு காவல் ஆணையர் பதில் அளிக்கவில்லை என்றால், யூகங்கள் பரவும். பாமக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி வேல்முருகன், இந்த விவகாரத்தில் உண்மையான அக்கறை இன்றி அரசியலுக்காக போராட்டம் நடத்துவதாக குற்றம்சாட்டினார். இதேபோல், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா மரண விவகாரத்தில் பாஜக மதமாற்ற கொலை என பிரச்சினை ஆக்கியது. அப்போது, தஞ்சை மாவட்ட எஸ்.பி., அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அமைச்சர், எஸ்.பி. ஆகியோர் மதமாற்றம் இல்லை என கூறியதால் இங்கே நீதி கிடைக்காது என்று கூறி சிபிஐக்கு மாற்றினார். ஒரு வேளை எஸ்.பி.யும், அமைச்சரும் இதற்கு விளக்கம் அளிக்காவிட்டால், சமூக பதற்றம் ஏற்பட்டிருக்கும். சிபிஐ விசாரணையில் மதமாற்றம் இல்லை என தெரியவந்துள்ளது. இப்போது, குற்றம்சாட்டியவர்களை என்ன சொல்வது, இதனால் ஒரு கலவரம் நிகழ்ந்திருந்தால் யார் பொறுப்பேற்பது.
ஐபிசி 220 ஏ பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அடையாளங்களை வெளியிடக்கூடாது என சொல்கிறது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பேசி, சந்தேகத்தை எழுப்பி என்ன சொல்ல வருகின்றனர். யார் அந்த சார் என ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். உங்களுடைய அரசியல் ரீதியான உள்நோக்கம் கொண்ட பொய் பிரச்சாரத்துக்கு அமையாதியாக இருந்து ஒத்துழைக்க வேண்டும். யாரும் அதற்கு பதில் சொல்லக்கூடாது. உங்கள் கேள்விக்கு கமிஷனர் அளித்த பதில் பொய் என்றாலும், டிராய் அமைப்பிடம் அழைப்பு விவரங்கள் உள்ளன. கமிஷனர் பொய் சொன்னால் மாட்டிக்கொள்வாரா இல்லையா? எஸ்.ஐ.டி மத்திய அரசிடம் இருந்து ஞானசேகரின் அழைப்பு விவரங்களை கேட்டுப் பெறலாம்
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உண்மையான அக்கறையுடன் போராட்டம் நடத்தவில்லை. பாமகவில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அதனை திசை திருப்ப சவுமியா அன்புமணி போராட்டம் நடத்தினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் சவுக்கால் அடித்துக்கொண்டார் என்றால், அப்படி செய்தால் மோடியோ, அமித்ஷாவோ கூப்பிட்டு விசாரிப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்க வில்லை. தலைவரை மாற்றப் போகிறார்கள். உட்கட்சி பிரச்சினை தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அதுதான். சீமானும் அவரது கட்சியினரும் ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். கட்சி களைந்துகொண்டிருக்கிறது. அதுதான் காரணம். விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கியுள்ளார். எதை எடுப்பது எதை பேசுவது என அவருக்கு தெரியவில்லை. அப்போ அவருக்கு எதாவது ஒன்று வேண்டும். சினிமாத்துறையிலேயே பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதனை கேட்காத விஜய், இந்த விவகாரத்திற்கு வந்துள்ளார். இவர்கள் யாருக்கும் உண்மையான அக்கறை கிடையாது. அரசியல் ஆதாயம் தேடுவது தான் திட்டம்
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது சகஜம்தான் என கூறுவது எவ்வளவு கேவலமானது. நீ அரசியல் கட்சி வைத்துள்ளது எதற்கு. ஒரு பெண் குற்றவாளியால் பாதிக்கப்பட்டு உள்ளார். உனக்கு ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினையை தீர்க்க பெண்ணின் துயரத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி வேண்டாம், சிபிஐ விசாரணை வேண்டும் என கேளுங்கள். உச்சநீதிமன்றத்திற்கு செல்லுங்கள் சிபிஐ விசாரணை கேளுங்கள். ஞானசேகரன் ஒரு கிரிமினல். அவன் திமுக இல்லை என அக்கட்சி தெரிவிக்கிறது. நாளை திமுக என தெரியவந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பாஜக இதுவரை எத்தனை விவகாரங்களை கையில் எடுத்துள்ளது என பார்ப்போம். கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம், ராணுவ அதிகாரி மரணம், லாவண்யா பிரச்சினை, கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரம் இப்படி ஒவ்வொன்றையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது ஒரு மாடல். இது தனியாக நடைபெற வில்லை. அனைத்து இடங்களிலும் பாஜக இப்படி கலவரத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்தி, அதன் வழியாகத்தான் ஆட்சிக்கு வருகிறது. திமுக, அதிமுகவில் அல்லது வேறு கட்சிகளில் கிரிமினல்கள் இருப்பார்கள். ஆனால் கிரிமினல் நடவடிக்கையே ஒரு கட்சியாக இருப்பது பாஜக தான்.
சிட்பண்ட், ஆருத்ரா போன்ற மோசடிகள் மட்டும் அல்ல இரு பிரிவுகள் இடையே கலவரத்தை தூண்டுவது தான் அவர்கள் கொள்கை. இதற்கு எங்கெல்லாம் சாத்தியம் உள்ளதோ அங்கெல்லாம் விசிறிவிடுவது. இதன் மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படுவது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது. ஆனால் காவல்துறையின் மீது தவறான தகவலை பரப்பியுள்ளனர். இதற்கு ஊடகங்கள் மன்னிப்பு கோர வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.