ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க 2000 லஞ்சம் ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் உட்பட இருவருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த முரளி என்பவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க பூந்தமல்லி தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பத்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் கணபதி மற்றும் இடைத்தராக செயல்பட்ட பாலாஜி ஆகியோர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக முரளி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்த நிலையில், அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை முரளி இடைத் தரகராகக் செயல்பட்ட பாலாஜியிடம் வழங்கினார். அவர் லஞ்ச பணத்தை கண்காணிப்பாளர் கணபதியிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரை கையும் களவுமாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை திருவள்ளுர் நீதிமன்ற முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி கே.மோகன் முன்பு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதிட்டார். விசாரணை நிறைவடைந்ததை அடுத்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் கணபதி, இடைத்தரகர் பாலாஜிக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.