ஆவடி அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி தாளார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
![திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு](https://apcnewstamil.com/wp-content/uploads/2022/11/Screenshot-267-2-300x160.png)
திருநின்றவூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளராக உள்ள வினோத் என்பவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி, வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்கதையான நிலையில் மாணவிகள் சிலர் இவரின் பாலியல் தொல்லையை தாங்கமுடியாமல் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவி ஒருவரின் பெற்றோர் பள்ளியில் வந்து புகார் அளித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
![A case has been registered against the principal of Tiruninravur Pvt. school under 4 sections including POCSO](https://apcnewstamil.com/wp-content/uploads/2022/11/Screenshot-269-300x167.png)
இதனை அடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சனை பெரிதானதை அறிந்த பள்ளி தாளாளர் வினோத் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் வினோத்தை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக கூறிய நிலையில் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கலைக்க முயன்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது போலீசார் மாணவர்கள் சிலரை தரதரவனை இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மாணவர்களும் பெற்றோர்களும் உறுதியாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பள்ளியின் ஆசிரியர்கள் சிலரும் திருநின்றவூர் நகர் மன்ற தலைவர் உஷாராணி உள்ளிட்டோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பள்ளியின் தலைவர் ஜெயராமனை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பள்ளியின் தாளாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.