ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்; திறந்து கிடந்த வங்கியை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்; நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்.ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ., சிவக்குமார், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில், ஆவடி சி.டி.எச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஆவடி செக்போஸ்ட் அருகே இயங்கி வரும் எஸ்.பி.ஐ., அரசு வங்கியின் மரக்கதவு பூட்டாமல் இருந்துள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் பூபாலன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேலாளர் பூபாலன் மற்றும் கடை நிலை ஊழியர் சுரேந்தர் ஆகியோர் வங்கியில் ஆய்வு செய்த போது, அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என தெரிந்தது.
விசாரணையில், நேற்று இரவு 7:30 மணியளவில், வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாக பூட்டாமல் சென்றது தெரிய வந்தது. இந்த வங்கியில் 3000 க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். சம்பவ நாளன்று வங்கியில் 50 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. உரிய நேரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டதால், அதிர்ஷ்டவசமாக வங்கியில் இருந்த பணம் திருடு போகாமல் தப்பியது. பின்னா் வங்கி மேலாளர் தகவல் வங்கியை பூட்டினார்.
மேலும், சிறப்பாக பணியாற்றிய எஸ்.ஐ., சிவகுமாரை கமிஷனர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.