சிலிண்டர் விபத்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் பலி- தாய், மகன் பேத்தி என பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.
ஆவடி கோவில் பதாகை கலைஞர் நகர் 15 வது தெருவை சேர்ந்தவர் ரோஜா/64. இவர் கணவரை இழந்து தன் மகன் சங்கர் ராஜ் வ/41, மருமகள் அனிதா வ/36 மற்றும் பேர பிள்ளைகள் கீர்த்திகா வ/11, கெளதம் வ/10 என்பவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி இரவு வீட்டில் ரோஜா அடுப்பை ஆன் செய்த போது கேஸ் கசிவு காரணமாக தீடீரென வீட்டில் இருந்த சமையல் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரோஜா, மகன் சங்கர் ராஜ், பேத்தி கீர்த்திகா என்பவர்கள் மேல் தீ பற்றியது. இந்த தீ விபத்தில் ரோஜா 80% தீ காயங்களுடனும், சங்கர் என்பவருக்கு 30% மார்பில் தீ காயங்களுடனும், பேத்தி கீர்த்திகா என்பவருக்கு கால், முகத்தில் 30% தீக்காயம் ஏற்பட்டது.
![சிலிண்டர் விபத்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் பலி- தாய், மகன் பேத்தி என பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.](https://apcnewstamil.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-26-at-3.49.42-PM-1-768x1024.jpeg)
தீ காயம் ஏற்பட்டவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி ரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக சங்கர் ராஜ் மற்றும் அவரது மகள் கீர்த்தி ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் 30% தீ காயமடைந்த சிறுமி கீர்த்திகா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வந்த மூதாட்டி ரோஜாவின் மகன் சங்கர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கவனக்குறைவாக சிலிண்டரை பயன்படுத்தியதால் விபத்தில் தாய், மகன், பேத்தி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.