ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.87 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் மல்லிகா. அவரது கணவர் சந்திரபாபு காலமாகிவிட்டார். இவருக்கு ஆவடி அருகே வெள்ளானூர் அந்தோணி நகரில் ரூ.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,200 சதுரடி நிலம் உள்ளது.

அந்த நிலத்தை சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த சையத் இப்ராஹிம்(43) என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து மல்லிகாவின் கணவர் சந்திரபாபுவின் போலியான இறப்பு சான்றிதழ், அவரது மகள் தேவி பெயரில் போலியான வாரிசு சான்று பெற்று ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலியான பொது அதிகாரம் ஆவணத்தை தயார் செய்து உள்ளார்.
பின்னர் அந்த ஆவணம் மூலம் டானிபாய் என்ற பெண்ணுக்கு 2020 ஆம் ஆண்டு நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதனை சமீபத்தில் தெரிந்த கொண்ட மல்லிகா ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். ஆணையர் சந்தீப் ராய் ரத்தூர் புகாரை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சையத் இப்ராஹிம் கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


