ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள மதுகடைக்குள் அறுவாலுடன் நுழைந்த ரவுடியை வீரமாக பிடித்த போலீசார் வேகமாக அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே திருமுல்லைவாயல் கல்லறை எதிரே அரசு மதுக்கடை மற்றும் அனுமதி இல்லாத பாரும் செயல்பட்டு வருகிறது. இந்த கடை பாருக்குள் வீச்சறுவாலுடன் ஒருவர் நேற்று நுழைந்து மது பாட்டில் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாரில் இருந்த மற்ற மதுபிரியர்கள் ஓட்டம் பிடித்தனர். பாரில் பணிபுரிகின்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறுவாலுடன் இருந்த நபரை பிடித்து அவரிடம் இருந்த அறுவாலை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், வழியிலேயே பேரம் பேசி அந்த ரவுடியை இறக்கி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் போலீசாரின் நடவடிக்கையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


அதேபோன்று திருமுல்லைவாயல் காவல் நிலையம் அருகே கஞ்சா போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் சாலை ஓரமாக ஹெல்மெட் விற்பனை செய்துக் கொண்டிருந்தவரை அறுவாலால் வெட்டியுள்ளனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கஞ்சா போதை ஆசாமிகளை பிடித்து கைது செய்தனர். அப்பொழுது அங்கே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை ” எடுங்கள் எடுங்கள் படாமா எடுக்கிறீர்கள், ஜாமினில் வெளியே வந்து உங்களை பார்த்துக் கொள்கிறேன் என்று மிரட்டுகிறார்கள். அப்பொழுதும் எவ்வித ரீ ஆக்ஸனும் இல்லாமல் போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம் காவல் நிலையங்களில் மக்கள் புகார் கொடுக்க வந்தால் முதலில் புகாரை வாங்க மறுக்கிறார்கள். அப்படியே புகாரை வாங்கினாலும் வழக்கு பதிவு செய்யாமல் பஞ்சாயத்து பேசி குற்றவாளிகளுக்கு சாதகமாகவே நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


