Homeசெய்திகள்சென்னைசென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள்

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள்

-

- Advertisement -

திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் கருணாஸின் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட தயாரான நிலையில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் திருச்சி செல்வதற்காக நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் வந்திருக்கிறார். அவரது கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் செய்த போது, அதில் வெடிபொருள் இருப்பதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது. உடனே அந்தப்பையில் என்ன இருக்கிறது என்று கருணாஸிடம் அதிகாரிகள் விசாரித்த போது, அதில் அப்படி ஒன்றும் இல்லை என்ற கூறியுள்ளார்.

அந்த கைப்பையை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 2 பாக்ஸ்களில் தலா 20 குண்டுகள் வீதம் மொத்தம் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்திருக்கிறது. உடனே அதிகாரிகள் 40 கை துப்பாக்கி குண்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கருணாஸிடம் நடத்திய விசாரணையில், தனது சொந்த பாதுகாப்புக்காக முறையான உரிமம் பெற்று கை துப்பாக்கியை தான் வைத்திருப்பதாகவும், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால், தனது கை துப்பாக்கியை  தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டதாகவும், அந்த கையித்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 40 லைவ் குண்டுகள் மட்டும் தவறுதலாக கைப்பையில் இருந்து விட்டது என்று கூறினார். அதோடு அவர்  தனது கைத்துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒப்படைத்ததற்கான ஆவணங்களையும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் காட்டியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, கருணாஸின் திருச்சி பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டுகளை மீண்டும் அவரிடம் ஒப்படைத்தனர். இனிமேல் விமான சட்ட விதிகளுக்கு மாறாக துப்பாக்கி குண்டுகளை விமானத்தில் எடுத்து கொண்டு வராதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, கருணாஸ் காரில் திருச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் திருச்சி செல்ல வேண்டிய பயணிகள் விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

MUST READ