பீகார் அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு
வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக நான்கு அதிகாரிகளை கொண்ட பீகார் குழுவினர் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்தனர்.
தமிழகம் வந்த பீகார் குழுவினர் திருப்பூர் கோவை மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இன்றைய தினம் சென்னையிலும் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 100 வட மாநில தொழிலாளர்களை சந்தித்த பீகார் குழுவினர் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் செய்யும் தொழில்கள் குறித்தும் பாதுகாப்பு சூழல் குறித்தும் கேட்டறிந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில கிராமப்புற மேம்பாட்டு துறை செயலர் பாலமுருகன், “வட மாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரவிய விவகாரத்தில் தமிழக அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்தது.வதந்தி பரவிய விவகாரத்தில் பீகார் – தமிழ்நாடு அரசு இணைந்து சிறப்பாக செயலாற்றினோம். பீகார் தொழிலாளர்களிடம் ஆரம்பத்தில் பதற்றம் இருந்த நிலையில் தற்போது பயம் குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.