வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்த சிறுவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் எம் கே பி நகர் காவல் நிலையம் செயல்படுகிறது. இந்த காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவர் பென்சாம். வியாசர்பாடி பகுதியில் ஆட்டோ கண்ணாடிகளை சிலர் உடைத்ததாக வந்து புகாரை அடுத்து விசாரணைக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற 17 வயதுடைய நான்கு சிறுவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அவர்களை விசாரித்த காவல் ஆய்வாளர் பென்சாம் சிறுவர்கள் நான்கு பேரும் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்ததால், சலூன் கடைக்கு அனுப்பி அவர்களுக்கு மொட்டை அடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நுண்ணறிவு பிரிவினர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிய நிலையில், சிறுவர்களுக்கு மொட்டை அடிக்க வைத்ததால் காவல் ஆய்வாளர் பென்சாம் மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வடக்கு மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு புழல் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தபோது, சிவில் விவகாரத்தில் தலையிட்டு பெயிண்டர் சீனிவாசனை தாக்கியதாக அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தாக்குதல் வீடியோ இணையத்தில் அப்போது வைரலானது. இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பென்சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த விவகாரத்தில் இருந்து மீண்டும் பணிக்கு சேர்ந்தவர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.