குவைத்தில் இருந்து 150 பயணிகளுடன், சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.குவைத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று, சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானத்தில் 144 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 150 பேர் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த தஞ்சாவூர் சேர்ந்த சேக் முகமது (28) என்பவர், அடிக்கடி தனது, இருக்கையில் இருந்து எழுந்து, விமானத்தில் கழிவறைக்கு சென்று வந்தார்.
சேக் முகமதுவிடம் இருந்து புகைப்பிடித்ததற்கான வாசனை வருவதை, பக்கத்து இருக்கைகளில் இருந்த பயணிகள் அறிந்து, அவரிடம், விமானத்தில் புகைப்பிடிப்பது ஆபத்தானது, அதை செய்யக்கூடாது என்று கூறினார். ஆனால் சேக் முகமது, நான் கழிவறைக்கு சென்று ரகசியமாகத்தான் புகை பிடிக்கிறேன். எனவே அதில் ஒன்றும் தப்பு இல்லை என்று எதிர்வாதம் செய்தார். இதை அடுத்து பயணிகள் விமான பணிப்பெண்கள் இடம், சேக் முகமது குறித்து புகார் செய்தனர். பணிப்பெண்கள் சேக் முகமது இடம், இந்த விமானத்தில், உங்களோடு சேர்த்து 150 பேர் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். நீங்கள் விமானத்துக்குள் புகை பிடிப்பது, இந்த 150 பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டித்தனர்.

ஆனால் அப்போதும் சேக் முகமது, கழிவறைக்குள் சென்று புகை பிடிப்பதில் தவறு இல்லை என்று வாதித்தார். இதை அடுத்து, விமான பணிப்பெண்கள், விமானியிடம் பயணி குறித்து தெரிவித்தனர். இதை அடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, பயணி ஒருவர், விமானத்துக்குள் புகை பிடித்துக் கொண்டு, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் என்று தெரிவித்தார். இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். விமானம் சென்னையில் தரை இறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி சேக் முகமதுவை, விமானத்திலிருந்து கீழே இறக்கி, பாதுகாப்புடன், அவருக்கு குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனைகளை நடத்தி முடித்தனர்.
அதன் பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், பயணி சேக் முகமதுவை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, சேக் முகமதுவிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சேக் முகமது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர். இவர் குவைத்தில் டிரைவராக பணியில் இருக்கிறார். இப்பொழுது விடுமுறையில் சொந்த ஊர் வருகிறார் என்று கூறப்படுகிறது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமான பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக, விமானத்துக்குள் புகை பிடித்ததோடு, சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்த, பயணி ஒருவரை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்றவர்கள் பொழுதுபோக்குக்காக படம் எடுக்குறாங்க…. ஆனா தமிழ் இயக்குனர்கள்…. ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!