மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வரை தன் வாழ்வை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் நாட்டுக்கும் அர்ப்பணித்து சென்ற ஒரு மாபெரும் தலைவர், சீத்தாராம் யெச்சூரி என, கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி, சென்னை தி.நகரில் உள் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப்படத்திற்கு, கவிஞர் வைரமுத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சீத்தாராம் யெச்சூரி பொதுவுடைமை இயக்கத்தின் போர் சிங்கம் என்றார். அவரது மறைவு, ஒரு கட்சிக்கான இழப்பு அல்ல, தேசத்துக்கான இழப்பு என்று குறிப்பிட்ட வைரமுத்து, கட்சிக்காக மட்டும் போராடுகிறவர் அரசியல்வாதி என்றும் தேசத்திற்காக போராடுமவர் தேசியவாதி என அறியப்படுவதாகவும் தெரிவித்தார்.
சீத்தாராமின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதல்ல எனக் கூறிய வைரமுத்து, அந்த இடத்தை நிரப்ப, நூறு அறிவு ஜீவிகள் வேண்டும் என்பதே தன் போன்றோரின் எண்ணம் என்றார்.
தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது, அவர் மீது கூடுதல் பாசத்தை தனக்கு கொடுத்திருப்பதாகவும் நெருக்கடி நிலையில் இருந்து இந்துத்துவா வரைக்கும் சமரசம் இல்லாமல் போராளியாக, தன் வாழ்நாள் முழுவதிலும் பயணித்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி என்றும் வைரமுத்து புகழ்ந்துரைத்தார்.
யெச்சூரியிடம் தனக்கு பிடித்த குணம் அஞ்சாமை என்றும் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்ற எழுகிறார் என்றால் அத்தனை கண்களும் அவர் மீது மொய்க்கும் என்றும் அத்தனை செவிகளும் அவர் மீது நிலை கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
யெச்சூரியின் அஞ்சாமைக்கு காரணம் அவரது சத்தியம் என குறிப்பிட்ட கவிஞர், நேர்மையாக வாழ்பவன் யாருக்கும் அஞ்ச மாட்டான் என்றார்.
மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வரை தன் வாழ்வை இயக்கத்திற்கும் நாட்டுக்கும் அர்ப்பணித்து சென்ற ஒரு மாபெரும் தலைவர் சீத்தாராம் யெச்சூரி என்றும் வைரமுத்து தெரிவித்தார்.