ஐவிஎம்எஸ் தொழில்நுட்பம் மூலம் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க 28 இடங்களில் 100 கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று திருடு போன 3200 வாகனங்கள் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் தினமும் இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்படுவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஐவிஎம்எஸ் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் திருடு போன வாகனங்களை போலீசார் கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று வருடம் காணாமல் போன 3200 வாகனங்கள் தேடும் பணியில் சென்னை காவல்துறை ஈடுபட்டுள்ளது. ஐவிஎம்எஸ் தொழில் நுட்பங்கள் மூலம் திருட்டு வாகனங்கள் கண்டுபிடிக்கப்படுவது எப்படி?
பொதுவாக திருட்டு, கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க முக்கியமாக உதவுவது மூன்றாம் கண்ணான சிசிடிவி கேமராக்கள் தான். குறிப்பாக சென்னை போக்குவரத்து காவல்துறையை பொருத்தவரையில் விதிகளை மீறும் வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் பிடிப்பதற்கு அதிநவீன கேமராவான ஏஎன்பிஆர் கேமராவை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கேமராக்கள் மூலம் விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை வைத்து தானாக அபராதங்களை வாகன ஓட்டுனர்களுக்கு விதிக்கும். இந்த கேமராக்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிப்பது மட்டுமல்லாது, திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கவும் உபயோகிக்கப்படுகிறது.
ஐவிஎம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு என்ற தொழில்நுட்பத்தை சென்னையில் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை காவல்துறை அமைத்துள்ளது. இதன் மூலம் 28 இடங்களில் 100 கேமராக்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பணி என்பது காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாது 80 நிலையான இடங்களில் கேமராக்கள் பொருத்தியும், 50 நகரும் நவீன கேமராக்களை பயன்படுத்தியும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் – உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல் (apcnewstamil.com)
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருட்டு வாகனங்களை விரைவில் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை காவல்துறை செய்து வருகிறது. இது போன்ற தொழில்நுட்பம் இல்லாத காரணங்களால் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையை ஏற்பட்டது. தற்போது கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை சுமார் 3,200 திருடு போன வாகனங்களின் முழு தகவல்களையும் இந்த ஐவிஎம்எஸ் தொழில்நுட்பத்தின் டேட்டா பேஸில் பதிவேற்றம் செய்து திருடப்பட்ட வாகனங்களை கண்டுபிடித்து வருகின்றனர்.
சமீப காலமாக வாகனங்கள் திருடப்பட்டு அவை செயின் மற்றும் செல்போன் பறிப்பு மற்றும் குற்றச்சம்பங்களுக்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு வாகனத்தை திருடியவர்கள் சென்னை மாநகரப் பகுதியில் எடுத்துச் செல்லும்போது, ஐவிஎம்எஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கேமராக்களில் உடனடியாக வாகனம் திருடு போன பகுதியில் உள்ள பொறுப்பு அதிகாரியான உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையருக்கு whatsapp மூலம் தகவல் சென்றுவிடும்.
பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர் (apcnewstamil.com)
ஏற்கனவே திருடு போன 3200 வாகனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிற காரணத்தினால் இந்த கேமராக்கள் மூலமாக திருட்டு வாகனங்கள் செல்லும் பொழுது நம்பர் பிளேட்டை அடையாளம் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறது.
இதை அடிப்படையாக வைத்து சில நாட்களிலேயே திருடு போன வாகனங்களை போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர். அந்த வகையில் தினமும் இரண்டு வாகனங்கள் கண்டுபிடிக்கும் வகையில் தொழில்நுட்பம் உதவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல்-ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான் (apcnewstamil.com)
அந்த வகையில் பரங்கிமலை பகுதியில் காணாமல் போன இருசக்கர வாகனத்தை பாரிஸ் கார்னரில் உள்ள சிசிடிவி கேமராவில் கடக்கும் போது உடனடியாக விசாரணை அதிகாரிக்கு whatsapp மூலம் தகவல் கொடுக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்திலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்கப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இது போன்ற தீவிர கண்காணிப்பின் காரணமாக வாகனங்கள் திருடு போவது குறையும் எனவும் , இனி வாகனங்களை திருடுவதற்கு திருடர்கள் பயப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.