மணலி மண்டலத்தில் வீட்டு வரியின் பெயர் மாற்றம் செய்ய ரூ 6 ஆயிரம் லஞ்சம் கேட்ட வரி மதிப்பீட்டாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மணலி, பஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (47). மணலி மண்டலம் வருவாய் பிரிவில் வரி மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மணலி புதுநகர் வடிவுடையம்மன் நகரச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தன்னுடைய வீட்டு வரியின் பெயரை மாற்றுவதற்காக பாஸ்கரை அணுகி உள்ளார். அப்பொழுது அவர் பெயர் மாற்றம் செய்ய ரூ 6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தர முடியாது என்று மறுக்கவே, தரவில்லை என்றால் பெயர் மாற்ற முடியாது என்று வரியின் பெயரை மாற்றாமல் இழுத்து அடித்துள்ளார்.
இதுகுறித்து சீனிவாசன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஊழல் தடுப்பு துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் பாஸ்கர் குறித்த விவரங்களை விசாரித்த போது அவர் இது போல் பொதுமக்களிடம் பலமுறை லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.
இதை அடுத்து அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி சீனிவாசனிடம் ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அந்த பணத்தை பாஸ்கரிடம் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்படி உள்ளே சென்ற சீனிவாசன் பணத்தை பாஸ்கரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பாஸ்கர் அதை வாங்கி தனது மேல் பாக்கெட்டில் வைத்துள்ளார். அப்போது வெளியில் தயாராக இருந்த ஊழல் தடுப்பு துறை 5 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்து பாஸ்கரை கையும் களவுமாக பிரித்து கைது செய்து தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்
வரி மதிப்பீட்டாளர் லஞ்சம் வாங்கிய புகாரில் பிடிபட்டது மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.