கே.ஜி.எஃப் 3 நிச்சயம் வரும் என நடிகர் யாஷ் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் யாஷ் நடிப்பில் வெளியான படம் தான் கே.ஜி.எஃப். ஆனால் இந்த படம் வெளிவந்த பின்னர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கிய கே.ஜி.எஃப் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வந்த நிலையில் படமானது ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் நடிகர் யாஷை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அந்த வகையில் திரும்பிய பக்கமெல்லாம் ராக்கி பாய் ராஜ்ஜியம் தான். இந்நிலையில் கே.ஜி.எஃப் 3 திரைப்படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நடிகர் யாஷ் தற்போது டாக்ஸிக் மற்றும் ராமாயணம் ஆகிய படங்களையும் பிசியாக நடித்து வருகிறார். அதேசமயம் இயக்குனர் பிரசாந்த் நீல், சலார் 2, NTR31 ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி பிரசாந்த் நீல், யாஷ் ஆகிய இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் கே.ஜி.எஃப் 3 திரைப்படம் உருவாகுமா? என்ற கேள்வியும் எழுகிறது. எனவே தற்போது நடிகர் யாஷ், கே.ஜி.எஃப் 3 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். “கே.ஜி.எஃப் 3 படம் நிச்சயம் வரும். நான் உறுதியாக சொல்கிறேன். ஆனால் நான் இப்போது டாக்ஸிக் மற்றும் ராமாயணம் ஆகிய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ராமாயணம் திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தை தவிர வேறு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன் எனவும் ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் யாஷ்.