கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் திருமணம் ஆன பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய நினைத்த 24 வயது இளைஞர் தனது மரணத்திற்கு காரணம் என பெண்ணின் செல்போன் நம்பரை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (24) சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
ஏற்கனவே திருமணம் ஆன கொருக்குப்பேட்டை கார்னேஷன் நகர் பகுதியை சேர்ந்த பவானி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பவானி தனது கணவருடன் விவாகரத்து ஆகப்போவதாக பிரேம்குமாரிடம் கூறி இருந்திருக்கிறார். அதன் பின்னர் பவானியும் பிரேம்குமாரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இதற்கு பிரேம்குமாரின் வீட்டில் விவாகரத்து நோட்டீஸ் வந்தவுடன் அதைப்பற்றி பேசலாம் என்று கூறியிருக்கின்றனர்.ஆறு மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை பவானி வேறொரு நபருடன் ஒன்றாக இருப்பது போல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை பிரேம்குமார் பார்த்துவிட்டு பவானியிடம் யார் இவர் என்று கேட்டுள்ளார். அதற்கு எனக்கு நீ தேவையில்லை whatsapp ஸ்டேட்டஸில் இருப்பவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
நேற்று காலை முதல் பவானியிடம் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கெஞ்சி மன்றாடியும் பவானி ஒப்புக்கொள்ளாததால் மன உளைச்சலுக்கான பிரேம்குமார் பவானியால் ஏமாற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தனது செல்போனில் எனது மரணத்திற்கு காரணம் பவானி என்று கூறி பவானியின் செல் போன் நம்பரை ஸ்டேட்டஸில் வைத்துவிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாலு மணி அளவில் பிரேம்குமாரின் அம்மா வந்து பார்த்தபோது பிரேம்குமார் தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அருகில் இருப்பவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு ஏற்கனவே பிரேம்குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த ஆர்கேநகர் போலீசார் பிரேம் குமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.