தமிழ் சினிமாவில் டைரக்ஷன், இசை, பாடலாசிரியர், நகைச்சுவை எழுத்தாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர்கள் வெகு சிலரே. அவர்களில் முக்கியமானவர் தமிழ் சினிமா கண்டெடுத்த தங்கம் “கங்கை அமரன்“. அந்த வகையில் ஆல் இன் ஆல் அமரன் என்று இவரை அழைக்கலாம். தமிழ் சினிமாவில் ஏதாவது ஒன்றில் சாதித்தாலே அவர்களை வெகு விமர்சையாக கொண்டாடுவோம். தன்னுடைய இத்தனை திறமைகளை அடக்கிய கங்கை அமரனை வாழ்நாள் முழுவதும் கொண்டாடினாலும் தவறு இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவில் இவருடைய படங்களும், பாடல்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கின்றன.
தொடக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் தம்பி என்ற அடையாளத்தோடு சினிமாவில் களமிறங்கினார் கங்கை அமரன். இருப்பினும் தன்னுடைய தனித்திறமையினால் தன்னை அசைக்க முடியாத கலைஞனாக நிலை நிறுத்திக் கொண்டார். இவர் எப்பேர்பட்ட இயக்குனர் என்பதற்கு சான்றாக “கரகாட்டக்காரன்“படம் ஒன்று மட்டுமே போதும். இப்படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் கூட பல சினிமா விழா மேடைகளில் இப்படத்தை பற்றி பேசிப் பார்த்திருப்போம். வருடக் கணக்கில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிய படம் இது.
1982ல் வெளியான கோழி கூவுது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய கங்கை அமரன் அதன் பின்னர் தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கினார். பின்னர் கோயில் மணி ஓசை, அத்தை மக ரத்தினமே உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருந்தார். இவருடைய மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இருவரும் வெள்ளித் திரையில் கலக்கி வருகின்றனர். இவ்வளவு வருடங்கள் கடந்தும் இவருடைய பாடல் வரிகள் இன்றைய தலைமுறைக்கு ஏற்றது போல துள்ளலாகவே இருக்கும். வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் கூட ஒரு பாடலை எழுதியிருக்கிறார் கங்கை அமரன். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் கங்கை அமரனுக்கு இன்று 76 வது பிறந்தநாள்.நாமும் வாழ்த்துகளை பகிர்வோம்.
- Advertisement -