தமிழ் சினிமாவில் பி.எஸ். மித்ரன் கடந்த 2018 ஆம் ஆண்டு விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோரின் நடிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது.
அதைத் தொடர்ந்து இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தையும், கார்த்தி நடிப்பில் சர்தார் படத்தையும் இயக்கினார். அதில் சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது சர்தார் 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் பி.எஸ். மித்ரன். கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் பி.எஸ். மித்ரன் – விஷால் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இவர்களது கூட்டணியிலான புதிய படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமானது இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறதா? அல்லது தனி ஒரு படமாக உருவாக இருக்கிறதா? என்பது தொடர்பான தகவலும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -