Homeசெய்திகள்சினிமாஇளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

-

- Advertisement -
இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழ் சினிமாவின் தனி சகாப்தம் இளையராஜா. கோலிவுட் திரையுலகின் அடையாளமாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. 80-களில் தொடங்கி இன்று வரை அவரது பாடல்களை ஒலிக்காத ஊரும் இல்லை, நாடும் இல்லை. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும், ஏன் இந்திய மொழிகளுக்கு கூட முடி சூட மன்னனாக விளங்குகிறார் இளையராஜா. முதியோர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைய சமுதாயமும் இவரது பாடல்களுக்கும், இசைக்கும் அடிமை என்று சொல்வதே நிதர்சனம்.

இவருக்கு யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். இதில் பவதாரிணி பிரபல பாடகரும் ஆவார். இவர், பல திரைப்படங்களில் பாடியும் இருக்கிறார். பிரபுதேவா நடிப்பில் வெளியான ராசய்யா படத்தில் பாடியதன் மூலம்தான் இவர் பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் பின்னணி பாடகியாகவே தனது திரைவாழ்வை பின்தொடர்ந்தார். அடுத்து மித்ரு, மை பிரெண்ட் படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து தனுஷ் நடித்த அனேகன் படத்தில் ஆத்தாடி ஆத்தாடி என்ற பாடலை பாடினார்.

கடந்த 2001-ம் ஆண்டு மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருதும் பெற்றார். இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 47 ஆகும். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ