காந்தாரா சாப்டர் 1 படத்தின் இரண்டு வார கலெக்ஷன் அப்டேட் வெளியாகியுள்ளது.
கன்னட சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, கடந்த 2022 இல் வெளியான காந்தாரா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிக வசூலை அள்ளியது. தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை ரிஷப் ஷெட்டி தானே இயக்கி நடித்து இருந்தார். கிளைமாக்ஸில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து காந்தாரா படத்தின் ப்ரீக்குவல் கதையை காந்தாரா சாப்டர் 1 என்ற தலைப்பில் எடுத்திருந்தார் ரிஷப் ஷெட்டி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இதில் ருக்மினி வசந்த், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் மேக்கிங், விஎஃப்எக்ஸ் காட்சிகள், கிளைமாக்ஸ், ரிஷப் ஷெட்டியின் நடிப்பு, ருக்மினி வசந்தின் கதாபாத்திரம் போன்றவை இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இரண்டாவது வாரத்தை கடந்து மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ள இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.717.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு கிடைக்கும் ரசிகர்களின் ஆதரவு பெருகுவதாலும், தீபாவளி விடுமுறை இருப்பதாலும் விரைவில் இப்படம் ரூ.1000 கோடியை கடந்து புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.