லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவின் 40வது பிறந்த நாள் இன்று (நவம்பர் 18).
கேரளாவை பிறப்பிடமாகக் கொண்ட நயன்தாரா தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் கலக்கி வருகிறார். அந்த வகையில் இந்திய அளவில் இவர் பிரபலமாகி இருக்கும் நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தமிழில் இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி திரைத்துறையில் தனக்கென தனி ஒரு அந்தஸ்தை உருவாக்கிக்கொண்டார். இருப்பினும் ஒரு சில படங்களில் இவரின் தோற்றம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அதேசமயம் உடல் பருமன் போன்ற காரணங்களால் விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் சீதை, போலீஸ் அதிகாரி, அம்மன் என பல அவதாரங்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அடுத்தது இவர் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். இவ்வாறு பல தடைகள் வந்தாலும் அதை தனது கடின உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் உடைத்தெறிந்து தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதன் மூலம் நடிகையாகவும், தொழிலதிபராகவும் வீர நடை போட்டு வருகிறார் நயன்தாரா.
இதற்கிடையில் கடந்த 2022-ல் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் உயிர், உலக் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய காதல் மற்றும் திருமணம் தொடர்பான ஆவணப்படம் இன்று (நவம்பர் 18) நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்த ஆவணப்படத்தை காண ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே தனது கணவன் மற்றும் மகன்களுடன் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நயன்தாராவிற்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வோம்.