இயக்குனர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் ‘முன்தினம் பார்த்தேனே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அடுத்தது இவர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் பொங்கல் ரேஸிலிருந்து விலகிய இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய மகிழ் திருமேனி நடிகர் விஜய் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “நான் தளபதி விஜயிடம் மூன்று கதைகளை எஅவரிடம் சொன்னேன். விஜய் அந்த மூன்று கதைகளும் பிடித்திருப்பதாகவும் அதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து வாருங்கள் நாம் அதை தொடங்குவோம் என்று சொன்னார். அதன்படி நான் ஒரு கதையை தேர்ந்தெடுத்தேன் அதற்கு விஜயையும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.
அப்போது உதயநிதி ஸ்டாலினிடம் ‘சார் நீங்கள் முழு மனதுடன் அனுமதி தந்தால் நான் விஜயை இயக்கிவிட்டு வருவேன்” என்று சொன்னேன். ஆனால் உதயநிதி ‘என்னால் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என்று சொன்னார். பின்னர் இது தொடர்பாக விஜயிடம் விளக்கினேன். அதன் பிறகு கலகத் தலைவன் படத்தை முடித்தேன். இப்போதும் அந்த மூன்று கதைகளும் விஜய்க்காக காத்திருக்கிறது. அதற்கு விஜய் தான் பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -