சென்னை இசிஆரில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமாலக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.1980-ல் தமிழில் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, முதல் மரியாதை உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கில் 70-க்கு மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை அருணா, தொழிலதிபர் மன்மோகன் குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னை ஈ.சி.ஆர். நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள கேசினோ டிரைவ் அவென்யூவில் சொகுசு பங்களா ஒன்றில் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் நடிகை அருணாவின் வீட்டிற்கு இரண்டு வாகனங்களில் வந்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகை அருணாவின் கணவர் தொழிலதிபரான மன்மோகன் குப்தா, ஆர்க்கிடெக் தொழிலிலும், உடற்பயிற்சி கூடங்களுக்கு நவீன உபகரணங்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து சப்ளை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து உடற்பயிற்சி உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது பணப்பரிவர்த்தனையில் சட்ட விதிகளை மீறியதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.
நடிகை அருணாவின் கணவர் மன்மோகன் குப்தா அமெரிக்காவில் உள்ள லைஃப் பிட்னஸ் என்கிற நிறுவனத்தின் உடற்பயிற்சி உபகரணங்களை இந்தியாவுக்கான டீலர்ஷிப் எடுத்து இறக்குமதி செய்து இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் (ரிவோக்) பிட்னஸ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் பிட்னஸ் சென்டரில் பிரபல நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து உடற்பயிற்சி உபகரங்களை இறக்குமதி செய்ததில் பணப் பரிமாற்ற முறைகேடு நடைபெற்றுள்ளதாக சந்தேகத்தின் பேரில் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…