நடிகை சாய் பல்லவி, தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.
நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்தது இவர், ராமாயணா திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர், தனுஷுடன் இணைந்து நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

நடிகை சாய் பல்லவி ஏற்கனவே தனுஷுடன் இணைந்து ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் பட்டிதொட்டி எங்கிலும் ஹிட்டடித்தது.
எனவே இந்த கூட்டணி மீண்டும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதேசமயம் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் புதிய படத்தில் (D56) சாய் பல்லவி தான் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல் கசிந்தது. இது தவிர ‘அமரன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்திலும் (D55) சாய் பல்லவி கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் சாய் பல்லவி எந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிக்க போகிறார்? அல்லது இரண்டு படங்களிலுமே தனுஷுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வரத் தொடங்கி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


