நடிகர் சந்தானம் க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் சந்தானம். இவர் கிட்டதட்ட 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களும் காமெடி கலந்த கதைக்களத்தில் இருக்கும். இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படத்தில் இவரை காமெடியனாக பார்த்த ரசிகர்கள், சந்தானம் மீண்டும் காமெடி ட்ராக்கிற்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி இவர், சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாக இருந்த புதிய படத்தில் காமெடியனாக நடிக்கப் போகிறார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நடிகர் சந்தானம், க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இதற்காக சந்தானம், எழுத்தாளர் ராஜேஷ்குமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. எனவே இனிவரும் நாட்களில் சந்தானம் நடிக்க உள்ள க்ரைம் திரில்லர் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.


