சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேட்டுவம் படத்தால் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி கபாலி, காலா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் பா. ரஞ்சித். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் பா. ரஞ்சித், பல படங்களை தயாரித்தும் வருகிறார். அடுத்தபடியாக இவர், அட்டகத்தி தினேஷ், ஆர்யா ஆகியோரின் நடிப்பில் வேட்டுவம் எனும் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என சமீப காலமாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு 2025 மார்ச் மாதத்திற்கு தள்ளிப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் வேட்டுவம் படம் தள்ளிப்போவதால் சார்பட்டா பரம்பரை 2 படத்தின் படப்பிடிப்பும் தள்ளிப் போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்டுவம், சார்பட்டா பரம்பரை 2 ஆகிய இரண்டு படங்களிலும் ஆர்யா நடிப்பதால் வேட்டுவம் படம் முடிந்த பின்னர் தான் சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம் தொடங்கும் போல் தெரிகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.