சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். அந்த வகையில் 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், யோகி பாபு ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி மும்பை, புதுடெல்லி, ஐதராபாத், கேரளா ஆகிய பகுதிகளில் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தங்கலான் போன்ற படங்களை தயாரிக்கும் பணிகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 99 கோடிக்கும் அதிகமான கடன் பெற்றிருந்தார். அதில் பாதி தொகையை மற்றும் செலுத்தி விட்டு மீதி தொகையை செலுத்தாமல் ஒப்பந்த விதிகளை மீறிய காரணத்தால் அவர் தயாரித்திருக்கும் கங்குவா திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர தடை விதிக்க கோரி ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கு நேற்று (நவம்பர் 7) விசாரணைக்கு வந்த நிலையில் இன்றைக்குள் (நவம்பர் 8) மீதத் தொகையை செலுத்தி விடுவோம் என ஞானவேல் ராஜா தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதன்படி மீதத் தொகையை ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை இல்லை என உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
- Advertisement -