நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் வெளியான பேட்ட படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் விஜயின் மாஸ்டர், விக்ரமின் தங்கலான் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தவிர இவர் தி ராஜாசாப் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு தென்னிந்திய திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் சமீபத்தில் நடந்த பேட்டியில் பல நடிகர்கள் பெண்களை மதிப்பது போல் நடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதன்படி அவர், “சினிமாவில் நிறைய நடிகர்கள் பெண்களை மதிப்பது போல் தங்களை காட்டிக் கொள்கிறார்கள். அதாவது அவர்கள் தங்களுக்கென ஒரு முகமூடி வைத்திருக்கிறார்கள். அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயரை வாங்கிக் கொள்கிறார்கள். கடந்த 5 வருடங்களில் மட்டுமே அப்படி முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன்.
அவர்களெல்லாம் தங்களை புத்திசாலி என நினைத்துக் கொள்கிறார்கள். எந்தெந்த நேரங்களில் பெண்களை மதிக்கும் வகையில் பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கேமராவிற்கு பின்னால் அந்த நடிகர்கள் எப்படி மாறுவார்கள் என்பதை நான் கண்கூட பார்த்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -