கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் துப்பறிவாளன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்க, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. துப்பறிவாளன் 1 படத்தை தயாரித்த விஷால் தான் துப்பறிவாளன் 2 படத்தையும் தயாரிக்கப் போகிறார் என்று அறிவிப்பும் வெளியானது. அதேசமயம் மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் இடையேயான ஒரு சில கருத்து வேறுபாடுகளால் படத்திலிருந்து மிஸ்கின் விலகிக் கொண்டார். அதைத்தொடர்ந்து விஷால், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கத் தொடங்கினார். அதன் பிறகு படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக துப்பறிவாளன் 2 படத்தில் நடிப்பதற்காக சில பாலிவுட் நடிகர்களிடம் விஷால் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. அதேசமயம் ரத்னம் படப்பிடிப்பை முடித்த பின் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தொடங்குவார் என்று செய்திகள் வெளியானது.
அதன்படி விஷால், ஹரி கூட்டணியிலான ரத்னம் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக சமீபத்தில் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் துப்பறிவாளன் 2 படம் சம்பந்தமான புகைப்படத்தை வெளியிட்டு படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதை சிம்பாலிக்காக கூறியிருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.