நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1979 ஆம் ஆண்டிலிருந்து சினிமா துறையில் பணியாற்றியவர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 156 படங்களில் நடித்திருக்கிறார். இவர் போலீஸ் அதிகாரியாக பல படங்களில் கம்பீரமாக காட்சியளித்தார். கடைசியாக தன் மகன் சங்கர பாண்டியன் நடித்துள்ள சகாப்தம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அரசியலிலும் ஆர்வமுடைய விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினை உருவாக்கினார். மக்கள் மத்தியில் புரட்சிக் கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றார். கருப்பு எம்ஜிஆர் என்ற மற்றொரு பெயரும் இவருக்கு உண்டு. இவ்வாறு சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்த விஜயகாந்த் கடந்த சில காலங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அதன் பிறகு இவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடிவதில்லை.
இந்நிலையில் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் விஜயகாந்த்திற்கு என்ன ஆச்சு? என சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகாந்த் பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அதனால் வதங்கிகளை நம்ப வேண்டாம் என்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.