தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால் நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து இவர் மீண்டும் சுந்தர். சியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக பல தகவல்கள் வெளியானது.
ஆனால் இது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இது தவிர விஷால், ஈட்டி படத்தின் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாகவும், அதில் விஷால் உடன் இணைந்து துஷாரா விஜயன் நடிக்க போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான அழகி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் திடீரென மயங்கி விழுந்தார். அதன் பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே மதகஜராஜா ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விஷாலின் கை நடுங்கிய வீடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், அவர் மேடையில் மயங்கி விழுந்த சம்பவமும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பின்னர் அவர் சரியாக உணவு எடுத்துக் கொள்ளாததால் எனர்ஜி இல்லாமல் மயங்கி விழுந்திருக்கிறார் எனவும் இனிவரும் காலத்தில் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் எனவும் தகவல் வெளியானது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் விஷாலின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர், “நான் புகைப்பிடிப்பதை ஐந்து வருடத்திற்கு முன்பே நிறுத்திவிட்டேன். மது குடிப்பதை இரண்டு வருடத்திற்கு முன்பே நிறுத்திவிட்டேன். இப்போதெல்லாம் நான் எந்த பார்ட்டிக்கும் போவதில்லை. கடைசியாக சுந்தர்.சி சாரின் பர்த்டே பார்ட்டிக்கு போனேன். என்னை விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்கள் கற்பனைக்கு சென்று என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள். அதெல்லாம் என்னை பாதிக்காது. நான் விரைவில் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -


