நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் நடந்த பேட்டியில் ‘ஆர்யன்’ படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான ராட்சசன், கட்டா குஸ்தி ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இருப்பினும் அதைத் தொடர்ந்து வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே அடுத்தபடியாக நடிகர் விஷ்ணு விஷால், ‘ஆர்யன்’ படத்தின் மூலம் சிறந்த கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி விஷ்ணு விஷாலின் தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை பிரவீன் .கே இயக்கி இருக்கிறார். ஜிப்ரான் இதற்கு இசையமைக்க ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ராட்சசன் படத்தை போல் க்ரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் விஷ்ணு விஷால், இந்த படம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார்.
அதன்படி அவர், “ராட்சசன் படம் இந்தியா முழுவதும் எனக்கு அங்கீகாரத்தை கொடுத்தது. ஆனால் கட்டா குஸ்தி திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி ராட்சசன் படத்தை விட பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. ஆர்யன் படமும் நிச்சயம் புதிய அனுபவத்தை தரும். ராட்சசன் படத்தை விரும்புவர்கள் இந்த படத்தையும் விரும்புவார்கள். அந்த ஒரு நம்பிக்கை இருப்பதால்தான் இந்த படத்துக்கு என் மகனுடைய பெயரை தலைப்பாக வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.