ஆந்திர மாநிலத்தில் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலம் யெண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் சகி துளசி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் காணாமல் போய்விட்டார். இதனால் துளசி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் துளசி புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டிற்கு அந்த பகுதியை சேர்ந்த சத்திரிய சேவா சமிதி என்ற அமைப்பு டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வழங்கி உதவிபுரிந்துள்ளனர். இந்த நிலையில், வியாழக்கிழமை அன்று அந்த அமைப்பிடம் இருந்து ஃபேன், லைட்டுகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வழங்குமாறு துளசி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி, கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு இரவு ஒரு ஆட்டோவில் வந்த நபர்கள் ஒரு பெட்டியை டெலிவரி செய்துள்ளனர். அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் மின்சாதன பொருட்களுக்கு பதிலாக அடையாளம் தெரியாத, சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் இருந்தது. மேலும், சடலத்துடன் ஒரு கடிதமும் இருந்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது, “துளசியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 3 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டியும் முதலுமாக ரூ.1.35 கோடி கொடுக்க வேண்டும் என்றும், மோசமான விளைவுகள் நடக்க விரும்பவில்லை என்றால், இந்த பணத்தை செலுத்த வேண்டும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த துளசி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. அட்னன் நயீம் ஆஸ்மி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலை சரிபார்த்து வருவதாகவும், பெட்டியில் அனுப்பப்பட்ட உடலை பரிசோதனை செய்த பின்னர் கூடுதல் விவரங்கள் தெரிய வரும் என்றும் எஸ்.பி. அட்னென் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சத்திரிய சேவா சமிதி அமைப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.