BSP மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்கள் வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். கைதானவர்களுக்கு பெண் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் கைதான 11 பேரில், ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னணியில் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை ஆட்டிப்படைத்த நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், திருவள்ளூரில் நிலத் தகராறு ஒன்றில் ஈடுபட, அதற்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் இருந்துள்ளார். இதில், இரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்த பிரச்னை கடைசியில் கொலையில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.