spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொன்று நகைகள் கொள்ளை... 15 வயது சிறுவன் உள்பட...

வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொன்று நகைகள் கொள்ளை… 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது!

-

- Advertisement -

அந்தியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொலை செய்து,  நகைகளை திருடிய வழக்கில் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

we-r-hiring

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள ஒலகடம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் என்கிற டெல்லி செல்வராஜ் (67). இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழிப் பிரிவின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆக இருந்துள்ளார். தற்போது பாஜகவில் உறுப்பினராக மட்டும் உள்ளார். செல்வராஜ் திருமணம் செய்து  கொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் திருநங்கை என்றும் கூறப்படுகிறது. இவர் டெல்லிக்கு கிளம்பினால் புடவை அணிந்துகொண்டு திருநங்கையாக செல்வார் என்றும், அங்கு அவர் பெயர் செல்வி அம்மா என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் சேலைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் சொத்துக்கள், நகைகள் இருந்த போதிலும் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஒலகடம் திரும்பிய செல்வராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி நீண்டநேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், அக்கம் பக்கத்தினர் செல்வராஜின் உறவினரான கார்த்திக் என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர். வீட்டுக்கு வந்த கார்த்திக் மற்றும் செல்வராஜின் கார் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் வீட்டின் கதவை தட்டியபோது, கதவு திறக்கவே இல்லை. தொடர்ந்து வீட்டின் மேல்ஏறி படிக்கட்டின் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது, தலைப் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் செல்வராஜ் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

தகவலின் பேரில் பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வெள்ளித்திருப்பூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து செல்வராஜின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜின் கழுத்தில் கூர்மையான ஆயுதம் கொண்டு குத்தியும், கழுத்து இறுக்கப்பட்டதன் காரணமாக கழுத்து எலும்பு உடைபட்டும் உயிரிழந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் சந்தேக மரண வழக்கை‍, ‍ கொலை வழக்காக மாற்றம் செய்து, 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள புரவிபாளையம் பகுதியில் அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் போலீசாரை கண்டவுடன் தப்பித்து ஓட முற்பட்டனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அதில் ஒருவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால் மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் பாஜக‌ பிரமுகர் செல்வராஜை கொலை செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில். அவர்கள், அம்மாபேட்டை அடுத்துள்ள குருவரெட்டியூர் மேட்டுப்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த அசோக் (24), 15 வயது சிறுவன், மற்றும் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திலீப் (20) என்பது தெரியவந்தது. இதில் அசோக் அம்மாபேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவர். இவர் மீது ஏற்கனவே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட வழக்கு உள்ளது.

தொடர்ந்து அசோக்கிடம் விசாரணை மேற்கொண்டதில் பாஜக பிரமுகரின் கொலையின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அசோக் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதம் மாறுவதற்காக ஒலகடம் பகுதியில் உள்ள மசூதிக்கு கடந்த சில மாதங்களாக சென்று வந்துள்ளான். அப்போது ஒலகடத்தில் பாஜக பிரமுகர் செல்வராஜை பார்த்துள்ளான். செல்வராஜ் கையில் உள்ள அனைத்து விரல்களிலும் மோதிரங்கள் இருந்ததையும், கழுத்தில் செயின் மற்றும் கையில் பிரேஸ்லெட் அணிந்து இருந்ததையும் பார்த்துள்ளான். செல்வராஜை பின் தொடர்ந்ததில் அவர் தனியாக வசித்து வருவதை கண்டுபிடித்துள்ளான். இதனை அடுத்து அவரது வீட்டில் உள்ளே புகுந்து திருட திட்டம் தீட்டியபோது செல்வராஜ் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது தெரியவந்தது. இதை அடுத்து கடந்த 2 மாதமாக அசோக் அடிக்கடி அப்பகுதியில் சுற்றி வந்துள்ளான்.

இந்த நிலையில் தான் செல்வராஜ் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதனை அறிந்த அசோக் கடந்த 22ஆம் தேதி தனது உறவினர்களான திலீப் மற்றும் சிறுவனை நள்ளிரவு ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஒலகடம் பகுதிக்கு வந்துள்ளான். தொடர்ந்து சிறுவனை இருசக்கர வாகனத்துடன் வெளியே தயார் நிலையில் நிற்குமாறு கூறிவிட்டு அசோக்கும், திலீப்பும் செல்வராஜின் வீட்டின் மீது ஏறி படிக்கட்டு வழியாக வீட்டிற்குள் சென்றுள்ளனர். உள்ளே இருவரும் சென்றபோது சத்தம் கேட்டு எழுந்த செல்வராஜை அசோக் துண்டைப் போட்டு கழுத்தை இறுக்கியுள்ளான். இதற்கிடையே திலீப் அங்கிருந்த கத்தரிக்கோல் ஒன்றை எடுத்து செல்வராஜின் கழுத்தில் குத்தியுள்ளான். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த செல்வராஜ் அப்படியே மயங்கி விழுந்து இறந்துள்ளார். உடனடியாக அசோக் மற்றும் திலீப் ஆகியோர் வீட்டில் நகைகளை தேடியபோது செல்வராஜின் கைப்பையில் இருந்து செயின், பிரேஸ்லெட் மற்றும் 5 மோதிரங்களை‌ எடுத்துக்கொண்டு வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் தயார் நிலையில் இருந்த சிறுவனுடன் மூவரும் தப்பித்து சென்றுள்ளனர்.

போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது

திரும்பவும் வீட்டிற்கு சென்றவர்கள் எதுவும் நடக்காதது போல் அவர்களது வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். மீண்டும் மூன்று பேரும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரியும்போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 7.3/4 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அசோக் மற்றும் திலீப்பை மாவட்ட கிளை சிறையிலும், சிறுவனை கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். கழுத்தில் செயின், கையில் பிரேஸ்லெட் மற்றும் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்து வலம் வந்த பாஜக பிரமுகர், அந்த நகைக்காகவே கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ