சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய போலி உதவி ஆணையரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது அலி, 40. அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே ‘குளோபல் டெக்’ என்கிற பெயரில் கணினி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது, அலுவலக எண்ணிற்கு நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட நபர், சென்னை மாநகராட்சியில் இருந்து பேசுவதாகவும்,மிக அவசரம் கம்பியூட்டர் சென்டரின் உரிமையாளரிடம் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது குறித்து தகவலறிந்த ஷேக் முகமது அலி, அந்த நபரை தொடர்பு கொண்டுள்ளார்.

தனது பெயர் பிரகாஷ் என அறிமுகம் செய்து கொண்ட அந்த நபர், தான் சென்னை மாநகராட்சியில், உதவி கமிஷனராக இருப்பதாகவும், அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான, ராமசாமி பள்ளியில் கல்வி நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா கலந்து கொண்டு, அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசு வழங்க இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கான செலவு ஒரு லட்சம் என்பதால், அம்பத்தூரில் உள்ள கல்வி நிறுவனங்கள், 10,000 ரூபாயை நிகழ்ச்சி செலவுக்காக, கொடுக்க வேண்டும் என மேயர் பிரியா தரப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அரசு நிகழ்ச்சிக்கு நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கூறி, ஷேக் முகமது அலி, 10,000 ரூபாயை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர், 5,000 ரூபாயாவது கொடுக்க வேண்டும், வரி , லைசன்ஸை போன்றவறிற்கு தங்களிடம் தான் வரவேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக் முகமது அலி, 2,000 ரூபாய் தருவதாக கூறியுள்ளார். பின், நேற்று முன்தினம் மாலை, ஷேக் முகமது அலியின் கம்பியூட்டர் இன்ஸ்ட்டியூடுக்கு வந்த பாண்டியன் என்பவர், உதவி கமிஷனர் பிரகாஷ் அனுப்பியதாக கூறி, 2,000 ரூபாயை வாங்கி சென்றுள்ளார்.
பின், நிகழ்ச்சி நடப்பதாக கூறிய அரசு உதவி பெறும் பள்ளியில் ஷேக் முகமது அலி விசாரித்தபோது, அங்கு எவ்வித நிகழ்ச்சியும் நடக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. பின், பணத்தை வாங்கிச் சென்ற பாண்டியனை தொடர்பு கொண்டபோது, பிரகாஷ் சொல்வதை நான் செய்வேன். எனக்கு வேறு ஒன்றும் தெரியாது என கூறி மழுப்பியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஷேக் முகமது அலி, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே போல் மேயர் பிரியா பெயரை பயன்படுத்தி பல பேரிடம், லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, சென்னை மேயர் பிரியா பெயரை பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி உதவி ஆணையர், உதவியாளரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் வசூல் வேட்டை செய்த மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.