கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியாகதுருகம் காவல் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் செயல்பட்டு வந்த அடகு கடையை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த சுமார் 80 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. காலை கடையை திறக்க வந்த உரிமையாளர் ராமச்சந்திரன், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காவல் நிலையத்திற்கு அருகிலேயே உள்ள அடகு கடையில் துணிகரமாக 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
