நெடுவரம்பாக்கம் கிராமத்தில் கொலை சம்பவம் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு வயது28 . இவர் டிராக்டர் மெக்கானிக்காக நெடுவரம்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவரது அண்ணன் லட்சுமணன் (வயது 30) அருகில் உள்ள தனியார் பள்ளியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இளங்கோவன் அண்ணன் லட்சுமணனுக்கு திருமணமாகி ஐந்து மாத கைக் குழந்தை உள்ளிட்ட இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு நெடுவரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்த நிலையில் துணைத்தலைவர் இளங்கோவன் தமது அண்ணன் லட்சுமணனை அழைத்துக் கொண்டு சோழவரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஊரில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக் குறித்து புகார் கொடுத்துள்ளார்.
உடனடியாக சோழவரம் ரோந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு துணைத்தலைவர் இளங்கோவன் தமது அண்ணன் லட்சுமணனுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
கல்குவாரியில் பாறை சரிந்து இளைஞர் உயிரிழப்பு
நெடுவரம்பாக்கம் ஊருக்குள் நுழைவதற்கு சுமார் இருநூறு மீட்டர் முன்பாக ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் அவர்களை வழி மறித்து மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். லட்சுமணன் முகத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் சிதைக்கப்பட்ட நிலையில் இளங்கோவன் பலத்த வெட்டு காயமடைந்த நிலையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அலறினார்கள். இருவரது அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் மற்றும் கிராமத்தில் இருந்த சோழவரம் காவல்துறையினர் இருவரையும் மீட்டு நல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இருவரையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் லட்சுமணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து லட்சுமணன் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
நெடுவரம்பாக்கம் துணைத்தலைவர் இளங்கோவன் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சோழவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுபேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை துணைத் தலைவர் காவல்துறையினரிடம் அடையாளம் காட்டியதால் முன் விரோதம் நீடித்து சமயம் பார்த்து இந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவாலயத்தில் ஏற்பட்ட சண்டைத் தொடர்பாக புகார் அளித்ததால் மட்டுமே கொலை நடந்ததா அல்லது அம்பேதகர் சிலை சேதம் சம்மந்தமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என கொலையாளிகள் கைது செய்யப்பட்டு முழுமையாக விசாரணை நடந்த பின்னரே தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்து விட்டு காவல் நிலையத்தில் இருந்து காவல்துறையினர் ஊருக்குள் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போதே அரங்கேறிய இந்த கொலை சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


