தனிமையில் மகிழ்வுடன் இருக்க பெண் உள்ளனர் எனக்கூறி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி நிகழ்ந்துள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த 5 பேர் கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் பிரவீன். இவர் லொகாண்டோ என்ற இணையதளம் மூலம் தனிமையில் மகிழ்வுடன் இருக்க பெண்களை தேடியுள்ளார். அப்போது ஹைபை மாடல் பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.6 ஆயிரம் எனவும், முழு இரவுக்கு ரூ.15 ஆயிரம் எனவும், இதர பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 3 ஆயிரம் என்றும் குறிப்பிட்டு செல்போன் எண்ணுடன் ஒரு போலி விளம்பரம் இருந்துள்ளது. அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு பிரவீன் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது மறுபக்கத்தில் இருந்து பேசிய மர்ம நபர் தனிமையில் மகிழ்வுடன் இருக்க பெண்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளார். மேலும் கியூஆர் கோர்டையும் அனுப்பி வைத்துள்ளார். அதோடு வாட்ஸ்அப் மூலம் சில பெண்களின் புகைப்படம் அனுப்ப முன்பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய பிரவீன் ரூ.500 பணத்தை மர்ம நபருக்கு ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் சில பெண்களின் புகைப்படத்தை அனுப்பி அதில் எந்த பெண் தேவைப்படுகிறது என்று மர்ம நபர் கேட்டுள்ளார். அவரும் ஒரு பெண்ணை குறிப்பிட அதற்கு மர்ம நபர் கார் வாடகை ரூ.1500 மற்றும் விடுதி கட்டணம் என மொத்தம் ரூ.30,000 பெற்றுள்ளார்.
ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி பெண்ணை அனுப்பாமல் இருந்திருக்கிறார். பலமுறை கேட்டும் பெண்ணை அனுப்பாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பொள்ளாச்சியில் ஒரு தங்கும் விடுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
பின்னர் சீனியர் எஸ்பி கலைவாணன் உத்தரவின் பேரில், எஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி விரைந்த தனிப்படை போலீஸார் புதுச்சேரி வழக்கில் சம்பந்தப்பட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த சங்கர் (29), ஹர்ஷ்வரதன்(23), ஹரிபிரசாத்(32), அருண்குமார்(29), மதுரை விஷ்ணு பாரத்(32) ஆகிய 5 பேரை நள்ளிரவு கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த 19 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கைதான கும்பலிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது, லோகாண்டோ மற்றும் எஸ்கார்ட் சர்வீஸ் போன்ற அமைப்புகள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளது எனவும் இந்த இணைய தளத்தில் அயல்நாடுகளில் சேவைகள் சிறப்பாகவும் மற்றவரை ஏமாற்றாமலும் கொடுக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
ஆனால் இங்கு தனிமையில் மகிழ்வுடன் இருக்கவும், மசாஜ் செய்யவும் பெண்கள் உள்ளனர் என குறிப்பிட்டு பலரிடம் இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. புதுச்சேரியில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 22 புகார்கள் இது சம்பந்தமாக பெறப்பட்டுள்ளது. இது போன்ற வழக்கில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவின் தலைவராக ஹரிபிரசாத் என்பவர் தான் முதலில் இருந்தே செயல்பட்டு வருகிறார் என்பதும் இந்த லொகோண்டோ மோசடி கும்பல் புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகா போன்ற அனைத்து மாநில இளைஞர்களிடமும் கடந்த இரண்டு வருடங்களாக பணம் பறித்து இருப்பது தெரியவந்துள்ளது.
அதோடு மது குடிக்க வருபவர்களிடம் ரூ.100, ரூ.200 கொடுத்து அவர்களுடைய பெயரில் சிம்கார்டு வாங்கி உபயோகப்படுத்தியதும், மோசடியாக பெறப்பட்ட பணங்களை பெற இதே போன்ற முறையை பயன்படுத்தி வங்கி கணக்குகளையும் பெற்றதும் தெரியவந்துள்ளது. எந்த ஒரு வங்கி கணக்கும் நேரடியாக இந்த மோசடி கும்பலை சேர்ந்த நபர்களின் பெயரில் இல்லை.
ஒரு வங்கி கணக்கில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.7,18,000 பணம் வந்து சென்றதும் தெரிகிறது. குறைந்தபட்சம் கடந்த இரண்டு வருடங்களில் 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களுடைய இணைய வழி மோசடியில் சிக்கி பணத்தை இழந்திருப்பதாக போலீ தரபில் தெரிவிக்கின்றனர்.