ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு பெற்று தருவதாக 25 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வானகரம் பகுதியை சேர்ந்தவர் வினோத். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு கழிவு பொருட்களை மொத்தமாக எடுத்து விற்பனை செய்யும் தொழில் நடந்து வருகிறது. இவரிடம் மறைமலைநகரைச் சேர்ந்த சுகுமாரன் 33, என்பவர் அறிமுகமாகி தனது நண்பர் காட்ரம்பாக்கம் தலைவர் ஜானகிராமன்/50 என்றும் அவர் பலருக்கு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து இரும்பு கழிவு எடுத்து கொடுத்து கோடிஸ்வரர் ஆக்கியுள்ளார். தாங்களும் நம்பினால் தங்களையும் கோடிஸ்வரர் ஆக்கிவிடுவார் என ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.
இதனை நம்பி ரூ.25 லட்சம் பணத்தை ஜானகிராமன் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஒரு மாதம், இரண்டு மாதம் என மாதக்கணக்கில் இருவரும் வினோத் குமாரை ஏமாற்றி வந்தனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்த. வினோத்குமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட சுகுமார் பிரபல ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி என கூறப்படுகின்றது. சுகுமார் மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.