வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளாா். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செந்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, அவன் மயக்கமடைந்திருந்தான். அவனது கிளாஸ்கோ கோமா அளவுகோல் (ஜிசிஎஸ்) 3/15 ஆக பதிவாகியிருந்தது.
நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரைப் பரிசோதித்து, தேவையான மதிப்பீடுகளை மேற்கொண்ட பிறகு மூளை இறப்பை உறுதிப்படுத்தினர்.

மகன் இறந்த பெரும் துயரத்தை மீறி, பெற்றோர் தங்கள் மகனின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர். அவர்களின் சம்மதத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாற்று ஆணையத்தின் (TRANSTAN) வழிகாட்டுதல்களின்படி மருத்துவர்கள் குழு கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் தோலை அறுவடை செய்தது. உறுப்பு ஒதுக்கீடு நடைமுறைகளின்படி, கல்லீரல், ஒரு சிறுநீரகம் மற்றும் தோல் ஆகியவை கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டன. உறுப்பு தானத்தின் மூலமாக மௌலீஷ் இறந்தும் ஐந்து பேருக்கு உயிர் கொடுத்துள்ளான்.
மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சி. செந்தில்வேல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கவுரிசங்கர் மற்றும் இளங்கோவன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் வினோஜ் ஆகியோர் குடும்பத்தினரின் இந்த உன்னத செயலைப் பாராட்டினர்.
மேலும், இது போன்ற உறுப்பு தானம் சமூகத்தில் பலரும் உறுப்பு தானம் செய்ய பெரும் உந்துதலாக இருக்கும் எனவும் இது விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் எனவும் தெரிவித்தனர்.


