தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை அகற்றக் கோரிய வழக்கில், “கடந்த 20 ஆண்டுகளாக இதே இடத்தில்தானே சிலை உள்ளது; இப்போது ஏன் பிரச்சினையைக் கிளப்புகிறீர்கள்?” என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு முழு விவரங்களையும் அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியின்றி தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், அதனை மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும், அங்கு கடவுள் மறுப்பு சம்பந்தமான கல்வெட்டுகள் இருப்பதாகவும், அவற்றைக் கோயில் இடத்திலிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அதிரடி கேள்விகள்:
விசாரணையின் போது கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் நிலத்தில்தான் பெரியார் சிலை உள்ளதாகவும், அதனை அகற்றி மாற்று இடத்தில் வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில், “பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரை நோக்கி பலத்த கேள்விகளை எழுப்பினர் “கடந்த 20 ஆண்டுகளாக இதே இடத்தில்தானே சிலை உள்ளது; இப்போது ஏன் இந்தப் பிரச்சினையைக் கிளப்புகிறீர்கள்?” “சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் யாரேனும் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்களா? அல்லது ஏதேனும் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்களா?” என்று நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு:
தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட கோயில் நிலத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தாசில்தார் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு தெரிவித்தனர். மேலும், அந்த இடத்தை சர்வே செய்து முழு அளவை வரைபடம் (Survey Map) தயார் செய்து, சிலை எங்குள்ளது என்பது குறித்த முழு விவரங்களையும் அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
