சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா மறைவிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான திரு.சங்கரய்யா அவர்கள் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தன் வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறையில் அடைபட்டு துன்புற்ற வரலாற்று போராளியான சங்கரய்யா அவர்கள், 3 முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி செய்து தமிழக அரசியல் வரலாற்றில் தனித்தடம் பதித்து மறைந்துள்ளார்.
சமூகநலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி இறுதி வரை சேவை செய்த தகைசால் தமிழரின் புகழ் நீடித்து நிலைபெறட்டும். நேர்மையான அரசியலுக்கு முன்னோடியாக விளங்கிய அன்னாரது இழப்பு அரசியல் ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும், மக்கள் பணி செய்வோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரது மறைவால் மிகுந்த வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.