திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்காக, முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற ஆன்லைன் எலெக்ட்ரானிக் குலுக்கல் (e-lottery) பதிவில் 24 லட்சத்து 5 ஆயிரத்து 237 பக்தர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் குலுக்கல் மூலம் 1.76 லட்சம் பேருக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.

திருமலையில் இந்த மாதம் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 10 நாட்களுக்கு உண்டான தரிசன டிக்கெட்டுகள் கவுண்டர்கள் மூலம் வழங்குவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

குலுக்கல் முறை விவரங்கள்
வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய முதல் மூன்று நாட்களுக்கு தரிசன டோக்கன்கள் எலெக்ட்ரானிக் குலுக்கல் முறையில் ஒதுக்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
பதிவு தொடங்கியது: நவம்பர் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு.
பதிவு நிறைவு: நவம்பர் 30 மாலை 5 மணியுடன் நிறைவு.
மொத்தப் பதிவு: 24,05,237 பேர்.
தளங்கள் வாரியான பதிவு:
தேவஸ்தான இணையதளம்: 9,28,608 பேர்
மொபைல் செயலி: 13,29,112 பேர்
அரசு வாட்ஸ்அப் எண்: 1,45,517 பேர்
அனுமதி எண்ணிக்கை: 1,76,000 பேர் (முதல் 3 நாட்களுக்கு).
குலுக்கல் முடிவுகள் இன்று வெளியீடு
குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு இன்று (டிசம்பர் 2) காலை 10 மணிக்கு குலுக்கல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பிற்பகல் 2 மணிக்கு மேல் அவர்களின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். அவர்கள் தங்களுக்கு வரும் இணைப்பைப் பயன்படுத்தி தரிசன டோக்கனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜனவரி 2 முதல் 8 ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள்
ஜனவரி 2 முதல் 8 ஆம் தேதி வரையிலான வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது:
ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள்:
வெளியீடு தேதி: டிசம்பர் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு.
எண்ணிக்கை: ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் வீதம், 7 நாட்களுக்கு 7,000 டிக்கெட்டுகள்.
ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள்:
வெளியீடு தேதி: டிசம்பர் 5 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு.
எண்ணிக்கை: ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள் வீதம், மொத்தம் 1.05 லட்சம் டிக்கெட்டுகள்.
முறை: முதலில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நேரடி இலவச தரிசனம்
டிக்கெட் அல்லது டோக்கன் பெறாத பக்தர்களுக்காக, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நேரடியாகத் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


