சபரிமலையில் நேற்று கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனா். இதனைத் தொடர்ந்து இன்று உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்து இன்றுடன் 10 நாள் முடிவடைந்துள்ளது. முந்தைய வருடங்களை விட இந்த வருடம் மண்டல காலத்தில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். தினமும் ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 20 ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தொடக்க நாட்களில் ஆன்லைனில் இடம் கிடைக்காத ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடனடி கவுண்டர்களில் முன்பதிவு செய்து தரிசனத்திற்காக குவிந்தனர். இதனால் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது. இதன் காரணமாக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதனைத் தொடர்ந்து உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பலனாக கடந்த சில தினங்களாக சபரிமலையில் நெரிசல் குறைந்து பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்து வந்தனர். தொடர்ந்து உடனடி முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

சராசரியாக தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை சபரிமலை நடை திறந்தபோது, பக்தர்கள் வரிசை சரங்குத்தி பகுதி வரை காணப்பட்டது. நேற்று இரவு 8 மணிக்குள் 92 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். இரவு நடை சாத்துவதற்குள் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது. இதனால் நேற்று பக்தர்கள் 5 மணிநேரத்திற்கு அதிகமாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக இன்று உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சபரிமலையில் கூட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது.


