ஆந்திராவில் திடீரென்று வனப்பகுதியில் இருந்து சாலையில் தோன்றிய யானைகள் கூட்டம். அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புலிச்சரளா மண்டல வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்புகள், கரும்பு தோட்டங்கள் ஆகியவற்றின் வழியாக யானை கூட்டம் அதிகாலையில் கிழக்குப் பக்கமாக நகர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றன. அதிகாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று யானைகள் சாலைக்குள் வந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.
அதற்குள் அந்த யானை கூட்டம் சாலையின் ஓரமாக சென்று கடந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யானைகள் கூட்டம் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.