மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக கொண்டுவந்திருக்கும் மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய சோனியா காந்தி, “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது. நாட்டில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பங்களிப்பை அளித்தவர்கள் பெண்கள். மகளிருக்கு இட ஒதுக்கீடு ராஜீவ்காந்தியின் கனவு, இதனை சிறப்பாக செயல்படுத்த சாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம், விரைந்து மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முதன்முறையாக ராஜீவ்காந்தி கொண்டுவந்தார். பெண்களின் விடுதலை புதிய இந்தியாவை அடையாளப்படுத்துகிறது. நாரி சக்தி வந்தான் சட்டத்தில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டு இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவை போல் இது இல்லை.” என்றார்.